Monday, April 14, 2008

நெல்லை தமிழ் முரசு: பாதிரியார்கள் உட்பட 1000 கிறிஸ்துவர்கள் இந்துமதத்துக்கு மதம் மாறும் விழா விமரிசையாக நடந்தது.

நன்றி தமிழ்முரசு, நெல்லை பதிப்பு.
எடுத்து கொடுத்த நண்பர் அரவிந்தன் நீலகண்டன் அவர்களுக்கும் நன்றி

நெல்லை தமிழ் முரசு: பாதிரியார்கள் உட்பட 1000 கிறிஸ்துவர்கள் இந்துமதத்துக்கு மதம் மாறும் விழா விமரிசையாக நடந்தது.

1000 கிறிஸ்தவர்கள் மதம் மாறினர் நெல்லை, தூத்துக்குடியைச் சேர்ந்த
2 பாதிரியார்களும் இந்துக்களாக மாறினர் தமிழகத்தில் முதன்முறையாக தாய் மதம் திரும்பும் நிகழ்ச்சி


நெல்லை, ஏப். 14-
தமிழகத்தில் முதன்முறையாக பாதிரியார்கள் உள்பட நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 185 தலித் கிறிஸ்துவ குடும்பத்தினர் ‘தாய் மதம் திரும்பும் நிகழ்ச்சி’ அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு நெல்லையில் இன்று நடந்தது. இதில் ஆயிரம் பேர் புனித நீர் தெளித்து இந்துக்களாக மாற்றப்பட்டனர்.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள நாங்குநேரி, சாத்தான்குளம், திசையன்விளை, வள்ளியூர், ராதாபுரம் உள் ளிட்ட பல பகுதிகளைச் சேர்ந்த 185 தலித் கிறிஸ்துவ குடும்பத்தை சேர்ந்த சுமார் 900 பேர் தாய் மதமான இந்து சமயத்திற்கு திரும்ப முடிவு செய்தனர்.
இதையடுத்து இந்து மக்கள் கட்சி சார்பில் அவர்கள் தாய் மதம் திரும்புவதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிகழ்ச்சி முதலில் நெல்லை டவுன் நெல்லையப்பர் கோயிலில் கடந்த மகா சிவராத்திரி நாளன்று நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கோயில் சார்ந்த நிகழ்ச்சிகள் மட்டுமே கோயில் கலையரங்கில் வைத்து நடத்த முடியும் என்றும் தனியார் நிகழ்ச்சிகள் ஏதும் கோயிலுனுள் நடத்த அனுமதிக்க முடியாது என்று கோயில் நிர்வாகம் தடைவிதித்தது. இதனை தொடர்ந்து அம்பேத்கர் பிறந்தநாளான இன்று தாய்மதம் திரும்பும் நிகழ்ச்சி நெல்லை ஜங்ஷன் சங்கீத சபாவில் இன்று காலை நடந்தது.
காலை 6மணிக்கு கணபதி ஹோமத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. பின்னர் தாய்மதம் திரும்புபவர்களுக்காக வேங்கட சாஸ்திரிகள் தலைமையில் பிராயச்சித்த யாகம் நடத்தப்பட்டது. பின்னர் தாய்மதம் திரும்புபவர்கள் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் தலைமையில் நெல்லையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதைத்தொடர்ந்து கங்கை, தாமிரபரணி, காவரி, கிருஷ்ணா, பிரம்மபுத்திரா, நர்மதா, கோதாவரி, சிந்து, சேது சமுத்திரம் ஆகிய புனித நீர் தெளித்து புனிதப்படுத்தும் சடங்கு நடந்தது. பின்னர் சைவம், வைணவம், சக்தி வழிபாடுகளை விரும்புபவர்களுக்கு அவர்களின் விருப்பத்திற்கேற்ற சமய சின்னங்கள் இடப்பட்டன. பின்னர் அவர்களின் விருப்பப்படி இந்து பெயர்கள் சூட்டப்பட்டன. இதில் பெரும்பாலும் அவரவர் ராசி பலன்கள் மற்றும் முன்னோர்களின் நினைவுப் பெயர்கள் சூட்டப்பட்டன. பின்னர் அவர்களுக்கு துறவிகள், சமய பெரியோர்கள் தீட்சை வழங்கினர்.
மதமாற்றும் சடங்கு சட்டப்பூர்வமான முறையில் நடைபெற்றது. மதம் மாறியவர்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் பெறுவதற்காக நூற்றாண்டு பழமை வாய்ந்த செங்கோல் மடத்திடம் இருந்து மதம் மாறியதற்கான சான்றிதழ் பெற்று பின்னர் அரசிதழில் பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சிகளை தொடர்ந்து இந்து சமயம் தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் இதுவரை கிறிஸ்தவ மத சடங்குகள் மற்றும் கோட்பாடுகளை மட்டுமே தெரிந்திருந்தவர்களுக்கு இந்து மதம் குறித்தும் அதன் சமய, நம்பிக்கை சடங்குகள், வழிபாடு முறைகள் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆன்மீகவாதிகள், மடாதிபதிகள் விளக்கமளித்தனர்.
இதையடுத்து மாலை 4 மணிக்கு சுவாமிசங்கரானந்தா தலைமையில் தாய் மதம் திரும்பியவர்கள் அனைவரும் வாகனத்தில் ஊர்வலமாகச் சென்று நெல்லையப்பர் கோயிலுக்குள் ஆலயப் பிரவேசம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது.
இதுகுறித்து இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் கூறும்போது, நெல்லையை தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் தாய் மதம் திரும்பும் நிகழ்ச்சி நடத்தப்படும். அடுத்த கட்டமாக கடலூர் மாவட்டத்தில் சமயக்குரவர் திருநாவுக்கரசர் தாய் மதம் திரும்பிய சிறுவதிகை கிராமத்தில் ஆக.18ம் தேதி தலித் மற்றும் வன்னிய மற்றும் கிறிஸ்துவர்கள் சுமார் 20 ஆயிரம் தாய்மதத்திற்கு திரும்பும் நிகழ்ச்சி நடத்தப்படுகின்றது. இரண்டு ஆண்டுக்குள் 20 லட்சம் பேர் தாய்மதத்திற்கு திரும்புவார்கள். அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம்.
அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் தமிழகம் முழுவதும் 38 ஆயிரம் கோயில்கள் உள்ளன. இந்தக் கோயில்களை நிர்வகிக்கும் பொறுப்பு மட் டுமே அறிலையத்துறைக்கு உண்டு. இதனை விடுத்து கோயில்களில் நடை பெறும் சமய சடங்குகளில் தலையிடும் உரிமை கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.
தாய் மதம் திரும்பும் நிகழ்ச்சியில் தமிழக துறவியர் பேரவை அமைப்பாளர் சதாசிவானந்தா சுவாமிகள், ராகவானந்தா சுவாமிகள், சங்கரானந்தா சுவாமிகள், ஏழை கிறிஸ்து மக்கள் இயக்க மாநில செயலாளர் நரேஷ் அம்பேத்கர், இந்து மக்கள் கட்சி நெல்லை மாவட்ட தலைவர் கணேசன், மாவட்ட அமைப்பாளர் முருகானந்தம், தேவர் பேரவை மணி உள்பட பலர் கலந்து கொண்ட னர்.தாய் மதத்திற்கு திரும்பியது குறித்து நெல்லையை அடுத்த வடுகன்பட்டியைச் சேர்ந்த மூதாட்டி பேச்சியம்மாள் கூறும் போது, எனது கணவர் கிறிஸ்தவ மதத்தை பின் பற்றி வருகிறார். நீண்ட நாட்களாக என்னையும் அதே மதத்தை பின்பற்ற கட்டாயப்படுத்துகிறார். ஆனால் எனக்கு அதில் உடன்பாடில்லை. எனக்கு பிடித்த கடவுள்களை வணங்குவதற்காக நான் மீண்டும் இந்துவாக மதம் மாற விரும்பினேன். அதன்படி இன்று மாறிவிட்டேன் என்றார். தனது குழந்தையுடன் மதம் மாறிய அதே கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண் ஹேமலதா கூறுகை யில், எனது கணவர் இந்து. நானும் அவரும் காதலித்து கலப்புத் திருமணம் செய்து கொண்டோம். அதைத்தொடர்ந்து எங்கள் இருவருக்கும் மதம் ரீதியாக சில பிரச்னைகள் எழுந் தது. இதையடுத்து நான் எனது கணவர் பின்பற்றும் இந்து மதத்திற்கு மாற விரும்பினேன். அதன்படி இன்று மதம் மாறிக்கொண்டேன் என்றார். தலித் கிறிஸ்தவர்கள் தாய் மதம் திரும்பும் நிகழ்ச்சியை முன்னிட்டு நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் மஞ்சுநாதா உத்தரவின் பேரில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

No comments: