Tuesday, September 16, 2008

பரமத்தி வேலூரில் சர்ச்கள் மீது திடீர் தாக்குதல் - இந்து முன்னணி பிரமுகர்கள் கைது

பரமத்தி வேலூரில் சர்ச்கள் மீது திடீர் தாக்குதல் - இந்து முன்னணி பிரமுகர்கள் கைது
செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 16, 2008

பரமத்தி வேலூர்: நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் சர்ச்கள் மீது இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக இரு பிரமுகர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

பரமத்தி வேலூர் அருகே உள்ளது பொத்தனூர் வெங்கமேடு. இங்கு பெந்தகோஸ்டல் சபை என்கிற கிறிஸ்தவ தேவாலயம் உள்ளது.

நேற்று முன்தினம் இரவு இங்கு அடையாளம் தெரியாத சிலர் உள்ளே நுழைந்து பாதிரியார் ஜெயராஜை அடித்து உதைத்தனர். பின்னர் கண்ணாடிகளை உடைத்தனர். ஜெயராஜின் மோட்டார் சைக்கிளும் அடித்து நொறுக்கி சேதப்படுத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து நரசேய திருச்சபைக்கு சென்ற ஒரு கும்பல் அங்கிருந்த பாதிரியார் ஞானச் செல்வனை தகாத வார்த்தைகளால் திட்டினர். பின்னர் தேவாலாயத்தின் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து உடைத்தனர். பிறகு தப்பிச் சென்று விட்டனர்.

இதுகுறித்து போலீஸில் புகார் கூறப்பட்டது. அதன் பேரில் பொத்தனூர் இந்து முன்னணி செயலாளர் ரமேஷ், கபிலர்மலை ஒன்றிய பொறுப்பாளர் வரதராஜ் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.

இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். அப்பகுதியில் மேலும் மோதல் வெடிக்காமல் இருக்க போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

No comments: