Wednesday, June 27, 2007

முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு: கலைஞர் அறிவிப்பு

முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு: விரைவில் அனைத்துக் கட்சிக் கூட்டம்


சென்னை, ஜூன் 27: முஸ்லிம்களுக்கான தனி இட ஒதுக்கீட்டுக்கு அவசரச் சட்டம் கொண்டுவருவது தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை விரைவில் கூட்ட முதல்வர் கருணாநிதி திட்டமிட்டுள்ளதாக இல்ஸôமிய இலக்கியக் கழக நிர்வாகி எஸ்.எம்.இதாயத்துல்லா தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற அனைத்துலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் கலந்து கொண்ட கருணாநிதி முஸ்லிம்கள் இட ஒதுக்கீட்டுக்கு அவசரச் சட்டம் கொண்டு வரப்படும் என்றார்.

கேரளத்திலும், கர்நாடகத்திலும் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு நடைமுறையில் இருக்குமானால், கொண்டுவரப்பட உள்ள அவசரச் சட்டத்தில் தமிழக ஆளுநரும் கையெழுத்திடுவார் என்றார் அவர்.

இந்த அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்த இஸ்லாமிய இலக்கிய கழக நிர்வாகிகள், கேரளத்திலும், கர்நாடகத்திலும் நடைமுறையில் உள்ள அரசாணைகளை முதல்வர் அலுவலகத்தில் கொடுத்தனர்.

மேலும் இந்த அவசரச் சட்டத்துக்கு ஆதரவு அளிக்கக் கோரி அனைத்துக் கட்சித் தலைவர்கள் உடனான இஸ்லாமிய இலக்கியக் கழக நிர்வாகிகள் சந்திப்பு அண்மையில் சென்னையில் நடைபெற்றது.

இதில் இஸ்லாமிய இலக்கிய கழக நிர்வாகிகள் என்.ஏ. அமீர் அலி, கவிக்கோ அப்துல் ரகுமான், எஸ்.எஸ்.ஷாஜகான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில் பங்கேற்ற மத்திய அமைச்சர்கள் மற்றும் கட்சித் தலைவர்கள், அவசரச் சட்டத்துக்கு ஆதரவு அளிக்க உறுதி அளித்துள்ளதாகவும் இஸ்லாமிய இலக்கிய கழகச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி தினமணி

No comments: