Monday, August 27, 2007

பழனி ரோப்-கார் விபத்தில் 4 பேர் பலி: ஆவின் அலுவலர் குடும்பத்தினர்


ரோப் கார் கேபிளை தரமான முறையில் எந்த வித ஊழலுமின்றி நிறுவிய தமிழக அரசுக்கும் கழக கண்மணிகளுக்கும் ...

--
நன்றி தினமணி
--
மலைப் பாதையில் விழுந்து நொறுங்கிய ரோப்-கார் கேபின்.

பழனி, ஆக. 27: பழனி மலைக்கோயிலுக்கு பக்தர்கள் செல்ல இயக்கப்படும் ரோப்-கார் கேபின் ஞாயிற்றுக்கிழமை கழன்று விழுந்ததில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்தனர்; 2 பேர் பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை ஆவின் நிறுவனப் பொது மேலாளர் சுப்ரமணி (54), அவரது மனைவி அமுதா (45), மகன் ரவிக்குமார் (30), மகள் நித்யா (25) சுப்ரமணியின் அண்ணன் மகள் தீபா (23) ஆகியோர் பழனி கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்துள்ளனர்.

இவர்களை திண்டுக்கல் மாவட்ட ஆவின் நிர்வாக மேலாளர் வடமலைசெட்டி (54) வரவேற்று, மலைக்கு அழைத்து சென்றுள்ளார். அடிவாரத்தில் மொட்டை போட்டுவிட்டு ரோப்-கார் மூலம் இவர்கள் மலைக்குச் சென்றுள்ளனர்.

ரோப்-காரில் சுமார் 18 பெட்டிகள் இயக்கப்பட்ட நிலையில், 3-ம் எண் பெட்டியில் வடமலைசெட்டி, நித்யா, சுப்ரமணி, தீபா ஆகியோரும் அதற்கு அடுத்து கிளம்பிய 9-ம் எண் பெட்டியில் ரவிக்குமார், அமுதா ஆகியோரும் சென்றுள்ளனர். 3-ம் எண் பெட்டி கேபின் மலை உச்சியில் உள்ள 75 அடி உயர டவரை அடைந்தபோது, அதில் உள்ள சக்கரங்களை பிடிக்க விரிந்த கிளட்ச் பிடிப்பின்றி பின்னோக்கி வேகமாகச் சென்று அடுத்து வந்த 9-ம் எண் பெட்டியில் பலமாக மோதி 100 அடி பள்ளத்தில் கீழே விழுந்தது.

மோதிய வேகத்தில் 9-ம் எண் பெட்டியின் கதவு திறந்ததில், அப் பெட்டியில் பயணம் செய்த அமுதா கீழே விழுந்தார். இந்த சம்பவத்தில் வடமலைசெட்டி, நித்யா, அமுதா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.

சுப்ரமணி பழனி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். படுகாயமடைந்த தீபா கோவைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

காயங்களுடன் இருந்த ரவிக்குமார் மீட்புப் பெட்டி மூலம் பத்திரமாக மீட்கப்பட்டு, பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மாலை 5 மணிக்கு சம்பவம் நடைபெற்றாலும், இரவு 9 மணி வரை மற்ற பெட்டிகளில் பயணம் செய்த சுமார் 60 பேரும் மீட்கப்பட்டனர்.

ரோப்-கார் இயக்கம் காலவரம்பின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

No comments: