Sunday, August 28, 2011

பள்ளி மாணவிகளிடம் சில்மிஷம் தலைமை ஆசிரியரை கைது செய்ய வலியுறுத்தி பிருந்தா கரத் முற்றுகை

பள்ளி மாணவிகளிடம் சில்மிஷம் தலைமை ஆசிரியரை கைது செய்ய வலியுறுத்தி பிருந்தா கரத் முற்றுகை
பதிவு செய்த நாள் : 8/28/2011 2:38:32
கருத்துகள் கருத்துகளை தெரிவிக்க

அலங்காநல்லூர்: பள்ளி மாணவிகளை சில்மிஷம் செய்த தலைமை ஆசிரியரை கைது செய்யாத போலீசாரை கண்டித்து, மார்க்சிஸ்ட் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா கரத் கிராமத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை அருகேயுள்ள பொதும்பு கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்தவர் ஆரோக்கியசாமி. இந்த பள்ளியில் 6ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் 4 பேரிடம் இவர் சில்மிஷம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து மாணவியின் தாய் பஞ்சு கொடுத்த புகாரின் பேரில், போலீசார் தலைமை ஆசிரியர் ஆரோக்கியசாமி, ஆசிரியர் சண்முகம், ஆசிரியை அமலிரோசி ஆகியோர் மீது வழக்கு பதிந்தனர்.
ஆரோக்கியசாமியை தவிர மற்ற 2 பேரும் கோர்ட்டில் ஜாமீன் பெற்றனர். ஆரோக்கியசாமி பள்ளியின் வளர்ச்சிக்கு பாடுபட்டு வருகிறார். அவர் இதுபோன்ற செயலில் ஈடுபட்டிருக்க முடியாது என கிராமத்தை சேர்ந்த பலரும் கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தனர். இதற்கிடையே ஆரோக்கியசாமியை சஸ்பெண்ட் செய்து கல்வித்துறை உத்தரவிட்டது. ஆனாலும், அவரை இதுவரை போலீசார் கைது செய்யவில்லை.
அவரை கைது செய்ய வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரை எஸ்.பி அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற ஜனநாயக மாதர் சங்கத்தை சேர்ந்த 134 பேர் கைது செய்யப்பட்டனர். நேற்று காலை மார்க்சிஸ்ட் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா கரத் பொதும்பு கிராமத்துக்கு வந்தார். ஆசிரியரை கைது செய்யாத போலீசாரை கண்டித்து மக்களுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போது பிருந்தா கரத் பேசுகையில், ‘‘ஆசிரியர்களே மாணவிகளிடம் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதால்தான் பெண் கல்வி பாதிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட மாணவிகள், அவர்களது குடும்பத்தினரிடம் போலீசார் இரவில் வந்து மிரட்டும் வகையில் விசாரிக்கின்றனர்’’ என்றார்.
பின்னர் கூடுதல் எஸ்.பி மயில்வாகனனை செல்போனில் தொடர்பு கொண்ட பிருந்தா கரத், ‘‘ஆரோக்கியசாமி மீது வழக்கு பதிவு செய்து 45 நாட்களாகியும் இதுவரை ஏன் அவரை கைது செய்யவில்லை ’’ என கேட்டதுடன், ‘‘நீங்கள் வரும்வரை கிராமத்தை விட்டு போகமாட்டேன்,‘Õ என்றார். இதை தொடர்ந்து டி.எஸ்.பி.,க்கள் பாண்டி, ரவிச்சந்திரன் ஆகியோர் கிராமத்துக்கு வந்து பிருந்தா கரத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர்.

No comments: