Saturday, October 21, 2006

இறைதூதர் பற்றி- சகோதரர் சுவனப்பிரியனுக்கு

அன்பு சகோதரர் சுவனப்பிரியனுக்கு,

///
சகோதரர் எழிலுக்கு!
//உங்களுக்கும் உங்கள் நண்பர்களுக்கும் பதில் சொல்லமுடியாத போது, "இத்துடன் இந்த விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன்" என்று நழுவுகிறீர்கள். //
எந்தக் கேள்விக்கு பதில் சொல்ல முடியாது என்று நழுவினேன் என்பதை விளக்கினால் நானும் தெரிந்து கொள்வேன்.
//


மன்னிக்க வேண்டுகிறேன். இவ்வாறு நான் எழுதியதை தவறாக எடுத்துக்கொள்ளவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். ஒரு சில இடங்களில் நீங்கள் இவ்வாறு எழுதியது அதன் மீது தொடர்ந்து விவாதம் நடப்பதை நீங்கள் விரும்பவில்லை என்ற தோற்றத்தை தந்தது. அவ்வள்வே.

///
//நீங்கள் இயேசு கிரிஸ்து பிறப்பதற்கு முந்தைய காலத்தில் வாழ்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.
அப்போது உங்கள் சமூகத்தில் 4 மனிதர்கள் (ஒரு சில குறைகளும் ஒரு சில நிறைகளும் கொண்ட மனிதர்கள்) தன்னை உண்மையான இறைதூதர் என்று அழைத்துக்கொண்டு போதிக்கிறார்கள்.
நீங்கள் யாரை உண்மையான இறைதூதர் என்று பின்பற்றுவீர்கள்? எப்படி? ஏன்?//
'மனிதர்கள் ஒரே ஒரு சமுதாயமாகவே இருந்தனர். எச்சரிக்கை செய்யவும் நற்செய்தி கூறவும் நபிமார்களை இறைவன் அனுப்பினான். மக்கள் முரண்பட்டவற்றில்
அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக அவர்களுடன் உண்மையை உள்ளடக்கிய வேதத்தை அருளினான்.'
2 : 213 - குர்ஆன்
ஒருவர் தன்னை இறைவனின் தூதர் என்று சொல்வதற்கு முதல் தகுதி அவருக்கு இறைவனிடம் இருந்து வேதம் வர வேண்டும். ஒவ்வொரு தூதருக்கும் தான் வேதங்களை
அருளியதாக இறைவன் குர்ஆனிலும் இதற்கு முந்திய வேதங்களிலும் குறிப்பிடுகிறான்.
//


மிகச்சரியான வார்த்தை. இறைவனின் தூதர் என்று சொல்வதற்கு முதல்தகுதி அவருக்கு இறைவனிடமிருந்து வேதம் வரவேண்டும்.

அப்படி வரும்போது அது இறைவனிடமிருந்துதான் வருகிறது என்ற அடையாளமும் வேண்டும். இல்லையெனில் அது உண்மையிலேயே இறைவனிடமிருந்து வந்த வேதம்தானா என்ற சந்தேகம் வர வாய்ப்பிருக்கிறது.

அதற்கு கீழே இன்னொன்றும் எழுதியிருந்தேன். அதாவது "இந்த காலத்தில் உங்களிடம் குரான் அல்லது இயேசுவின் போதனைகள் இல்லை ஆகவே அதனை மேற்கோள் காட்டமுடியாது" என்று குறித்திருந்தேன். அதனை உங்கள் பதிலில் நீக்கிவிட்டீர்கள். இருப்பினும் நீங்கள் சொல்வதையே எடுத்துக்கொள்கிறேன்.

//
என்னிடமும் வேதம் இருக்கிறது என்று யாரும் பொய் சொல்ல முடியாது. ஏனெனில் இறைவனின் வார்த்தைக்கும் மனிதனின் வார்த்தைக்கும் மிகப் பெரும் வித்தியாசம் இருக்கும். உதாரணத்திற்கு அரபி மொழி தெரிந்தவர்கள் குர்ஆனின் போதனைக்கும், முகமது நபியின் போதனைக்கும் உள்ள வித்தியாசத்தை மிக எளிதில் விளங்கிக் கொள்வார்கள். குர்ஆனின் எழுத்து நடை மிக உயர்ந்த தரமாக இருக்கும். முகமது நபியின் போதனைகளோ நாம் சாதாரணமாக உரையாடுவது போன்று சாதாரண மொழியில் இருக்கும். இதன் வித்தியாசத்தை மொழி பெயர்ப்புகளிலேயும் சர்வ சாதாரணமாகப் பார்க்கலாம். மேலும் இன்றைய அறிவியல் கண்டு பிடிப்புகளோடு மோதாமலும் அத்தகைய வசனங்கள் இருக்க வேண்டும். எல்லா காலத்துக்கும் பொருந்தியும் வர வேண்டும்.
//


தயவுசெய்து குரான் உண்மையிலேயே இறைவனிடமிருந்து வந்ததா என்று கேட்கவில்லை. இருப்பினும் அதனை உதாரணமாக பயன்படுத்துகிறீர்கள் என்று எடுத்துக்கொள்கிறேன்.

ஒரு புத்தகத்தின் நடை மிக உயர்ந்த தரமாக இருக்கும் என்று சொல்வது subjective. ஒருவருக்கு உயர்ந்த தரமாக தோன்றுவது மற்றொருவருக்கு அப்படி தோன்றாமல் இருக்கலாம். ஒரு புத்தகத்தின் நடை மிக உயர்ந்த தரமாக இருக்கிறது என்று பத்து பேர் எழுதியதை மேற்கோள் காண்பித்தால், அதே புத்தகத்தின் நடை மிகச்சாதாரணமானது என்று இன்னொரு பத்து பேர் எழுதியதை வேறொருவர் மேற்கோள் காட்டலாம். அந்த புத்தகத்தை இறைவனின் வேதம் என்று கூறும் நபர்கள் அது மேலான நடை என்றும் அந்த இறைதூதரை ஒப்புக்கொள்ளாதவர்கள் அது கீழான நடை என்றும் சொல்லலாம். (உதாரணமாக கிரிஸ்துவர்களின் இணையப்பக்கங்களில் குரானின் நடை மிகச்சாதாரணமானது, என்று எழுதப்பட்டிருப்பதை பார்க்கலாம்)

காளிதாசரின் காவியங்கள் எந்த வித சமஸ்கிருதக்கவிதையையும் விட மிக மிக உயர்ந்தவை என்பது என் எண்ணமாக இருக்கலாம். அதன் கவித்துவமும் நடையும் மிகச்சிறந்தவை என்று நான் கருதலாம். நீங்கள் கருதாமல் இருக்கலாம். கம்பனின் கவி அமுது எட்டிய உயரங்களை இன்னமும் உலகத்தின் எந்த மொழிக்கவிதையும் எட்டியதில்லை என்று நான் கருதலாம். நீங்கள் அப்படி கருதாமல் இருக்கலாம். இவர்கள் இறைதூதர்களா? அவர்களது புத்தகங்களுக்கு குரான் போன்ற அந்தஸ்து உண்டா? கம்பன் சாதாரணமாக பேசுவதற்கும் கவிதையாக பொழிவதற்கும் வித்தியாசம் இருந்திருக்கும். அதனால் கம்பன் இறைதூதராக ஆவாரா?

அறிவியல் சம்பந்தமாக எடுத்துக்கொள்வோம். ஒரு இறைதூதரை பின்பற்றுபவர்கள் அவரது புத்தகத்தில் உள்ளவை எல்லாம் அறிவியலை ஒத்து இருக்கின்றன என்று வாதிடலாம். மறுசாரார் அப்படி இல்லை என்று வாதிடலாம். இதனை இரண்டாம் நிலையில் வைப்போம்.
ஒரு இறைதூதர் தனது புத்தகத்தில் எந்த விதமான உலக விஷயங்களும் இல்லாமல் வெறும் நல்வாழ்வுக்கான அறிவுரைகள் மட்டுமே எழுதியிருக்கலாம். அதனால் அந்த புத்தகம் அறிவியலுக்கு பொருந்துமா இல்லையா என்ற விவாதத்துக்கே இடமில்லாமல் இருக்கலாம். அல்லவா?

//
அடுத்து அந்த இறைத் தூதர்களுக்கு கொடுக்கப் பட்ட அதீத சக்திகள். அந்த மக்கள் தூதர்களிடம் அத்தாட்சியைக் கேட்கும் போது இறைவன் சில அற்புதங்களை நிகழ்த்திக் காட்டுவான். ஏசு இஸ்ரவேலர்களைப் பார்த்துக் கூறியதாக குர்ஆன் சொல்லும் போது...'உங்கள் இறைவனிடமிருந்து சான்றை நான் கொண்டு வந்துள்ளேன். உங்களுக்காக களிமண்ணால் பறவையின் வடிவம் அமைத்து அதில் ஊதுவேன். இறைவனின் விருப்பப்படி அது பறவையாக மாறும். இறைவனின் விருப்பப்படி பிறவிக் குருடையும் குஷ்டத்தையும் நீக்குவேன். இறந்தோரை உயிர்ப்பிப்பேன்.நீங்கள் உண்பதையும் உங்கள் வீடுகளில் நீங்கள் சேமித்து வைத்திருப்பதையும் உங்களுக்குக் கூறுவேன்'
3 : 49 - குர்ஆன்
அந்த மக்களை இவர் இறைத் தூதர்தான் என்று விசுவாசம் கொள்வதற்காக இறைவன் இது போன்ற சக்திகளை அந்த தூதர்களுக்குத் தருவான். இதைப் பார்த்தும் இவர் இறைத் தூதர்தான் என்று விசுவாசம் கொள்வர். முகமது நபி காலத்தில் சந்திரன் பிளந்த அற்புதத்தை கேரள அரசன் சேரமான் பெருமாள் தன் சாளரத்தின் வழியாகப் பார்த்து அதிசயிததார். பிறகு தன் ஆஸ்தான ஜோதிடர்களிடம் இது பற்றிக் கேட்க அவர்கள் முந்தய வேதங்களை ஆராய்ந்து அரபுலகில் தூதர்அவதரித்திருப்பதன உண்மையை விளக்குகின்றனர். அதன் பிறகு அரசர் இஸ்லாமியராக மாறி முகமது நபியைச் சந்திக்க மெக்கா நோக்கி புறப்பட்டதையும் நாம் நம் நாட்டு வரலாறுகளில் பார்க்கிறோம். கண்ணதாசனும் கல்கியில் 'சேரமான் காதலி' என்ற தொடரை எழுதியதையம் நாம் அறிவோம். இது போன்று பல அற்புதங்களினால் நாம் ஒருவரை இறைவனின் தூதர் என்று முடிவு செய்கிறோம்.
//


அடுத்து, நீங்கள் குறிப்பிடுவது போன்ற வித்தைகளை செய்யும் ஏராளமானவர்கள் இந்தியாவில் இருந்தார்கள். ஏன் இன்னமும் இருக்கிறார்கள். இன்றும்கூட பல மந்திரவாதிகள் ஒன்றுமில்லாத தொப்பியிலிருந்து ஏராளமான பறவைகளை உற்பத்தி பண்ணுகிறார்கள். அவர்கள் எல்லோரும் இறைதூதர்களா?
ஏன் இப்போது கூட சுவிசேஷ கூட்டங்களில் பிறவிக்குருடரையும் முடமானவர்களையும் நடக்கவைக்கும் வித்தைகளை பார்க்கலாம். குஷ்டத்தை இன்று மருத்துவர்கள் நீக்குகிறார்கள். பிறவிக்குருடரையும் இன்று பார்வை உள்ளவராகா மாற்றும் தொழில்நுட்பம் வந்திருக்கிறது. (பரிசோதனையில் இருக்கிறது). இந்த மருத்துவர்களும் சுவிசேஷ பிரச்சாரகர்களும் இறைதூதர்களா?

ஒரு மேஜிக் ஷோவின் போது, நான் வீட்டிலிருந்து எடுத்து வந்த ரூபாய் நோட்டின் எண்ணை மந்திரவாதி சரியாகச் சொன்னார். இப்படிப்பட்ட திறமையான மந்திரவாதி கூறுவதையும் இறைதூதர் கூறுவதையும் எப்படி வித்தியாசப்படுத்தி பார்க்கப்போகிறீர்கள்?

சந்திரன் இரண்டாக தெரிவது முகம்மதுவின் சாட்சியம் என்று நீங்கள் கூறுகிறீர்கள். மேலும் இன்னொரு முறை கூறுகிறேன். முகம்மது இறைதூதரா அல்லவா என்பது என் கேள்வி அல்ல. இரண்டு மூன்று நபர்கள் ஆளுக்கொரு கண்கட்டு வித்தை செய்து தனது சாட்சியமே இறைவன் அளித்தது என்று கோரினால், நாம் எப்படி உண்மையான இறைதூதரை கண்டுபிடிப்பது என்பதுதான்.

(ஆனால், சந்திரனோ சூரியனோ இரண்டாக தெரிவது கானல் என்று சொல்லப்படும் மிராஜ் வகையைச் சார்ந்த ஒரு நிகழ்வு. ஒரு சந்திரன் இரண்டாக தெரிவது அதிசயமல்ல என்று உங்களுக்கு தெரியும் என்று கருதுகிறேன். வெப்பக்காற்று மேலெழும்போதோ அல்லது குளிர்காற்று மேலெழும்போதோ, அந்த காற்று ஒரு கண்ணாடி போல நின்று அந்த காற்றின் ஒரு பக்கத்திலிருக்கும் சந்திரனை பிரதிபலித்து இரண்டாக காட்டும். இதன் பெயர் லாட்டரல் மிராஜ் lateral mirage. பக்கவாட்டில் இன்னொரு சந்திரன் தோன்றும் லாட்டரல் மிராஜ் அபூர்வமாக தென்படும். ஆனால் அது அதிசயமல்ல.இன்னொருவர் சூரியன் இரண்டாக தெரியும்போது, என் சாட்சியம் இது என்று கூறினால், நாம் எப்படி அதனை புரிந்து கொள்ள வேண்டும்? அப்படிப்பட்ட ஒரு மிராஜ் நடக்கும்போது அதனை ஒருவர் இதுதான் என் சாட்சியம் என்று ஏமாற்றினால் நம்மால் எப்படி அடையாளம் காண முடியும்?)

ஆகவேதான், எல்லா இறைதூதர்களுக்கும் பொதுவான அடையாளம் ஒன்றை கேட்கிறேன். இந்திய தூதுவர்கள் அனைவருக்கும் பொதுவான ஒரு இலச்சிணையை இந்திய அரசு கொடுப்பது போன்று, இறைவனும் தன் இறைதூதர்கள் அனைவருக்கும் பொதுவான ஒரு அடையாளத்தை அனுப்பியிருக்க வேண்டும்.

///
//இறைவன் அனைத்து மக்களிடம் இவர்தான் இறைதூதர் என்று பேச முடியுமென்றால், ஏன் இடையே இறைதூதர் என்ற இடைத்தரகர்? சொல்ல வேண்டியதை நேரடியாக இறைவனே எல்லா மக்களிடம் கூறிவிடலாமே? அது ஒன்றும் கடினமான வேலையாக இறைவனுக்கு இருக்காதே?
பதில் கூறுவீர்கள் என்ற நம்பிக்கையுடன்//

'அவன் வானங்களையும், பூமியையும் முன்மாதிரியின்றிப் படைத்தவன். ஒரு காரியத்தை அவன் முடிவு செய்யும் போது அது குறித்து 'ஆகு' என்றே கூறுவான். உடனே அது ஆகி விடும்.'
2 : 117 -குர்ஆன்
'இறைவன் எங்களிடம் பேசக் கூடாதா? அல்லது எங்களுக்கு ஓர் சான்று வரக் கூடாதா?' என்று அறியாதோர் கூறுகின்றனர். இவர்களுக்கு முன் சென்றோர் இவர்களின் கூற்றைப் போலவே கூறினர். அவர்களின் உள்ளங்கள் ஒத்ததாக இருக்கின்றன. உறுதியான நம்பிக்கைக் கொள்ளும் சமுதாயத்திற்கு சான்றுகளைத் தெளிவுபடுத்துகிறோம்.'
2 : 118 - குர்ஆன்.
தன்னுடைய அடியானான எழில் மற்றொரு அடியானான சுவனப்பிரியனிடம் இப்படி ஒரு கேள்வியைக் கேட்பார் என்று இறைவனுக்குத் தெரிந்ததால்தான் பதிலை இறைவன் குர்ஆனிலேயேத் தருகிறான்.
//


நான் கேட்டிருக்கும்கேள்விகளை முன்னரே பலர் கேட்டிருக்கிறார்கள் என்றுதான் தெரிகிறது. அவ்வாறு கேட்பவர்களை "அறியாதோர்" என்று அவமானப்படுத்துவது ஏன் என்று தெரியவில்லை?

சாதாரண மக்களும் எந்த வித சந்தேகமும் இல்லாமல் புரிந்து கொள்ளக்கூடியதாகத்தானே இறைதூதரின் குணாம்சங்கள் இருக்க வேண்டும்? இவ்வாறு கேள்வி கேட்கும் வரைக்கும் மக்களை வைத்திருப்பது ஒரு முக்கியமான இறைதூதரை அனுப்பிவிட்டு அதற்கு தக்க சாட்சியங்களை அனுப்பாமல், கேள்வி கேட்பவரை பார்த்து "அறியாதோர்" என்று சரியாகப்படவில்லை. இதனைப்பற்றி இனிய சகோதரர் இப்னு பஷீர் அவர்கள் பதிவு சம்பந்தமாக எழுதியதில் எழுதியிருக்கிறேன்.

நம்பிக்கை கொள்ளும் சமுதாயம் என்றால் என்ன? யாரேனும் ஒருவர் தன்னை இறைதூதர் என்றுகூறினால் உடனே நம்பும் சமுதாயமா? அதாவது எந்த கேள்வியும் கேட்கக்கூடாது. எந்த ஆதாரமும் கேட்கக்கூடாது. எந்த சான்றும் கேட்கக்கூடாது. நான் இறைதூதர் என்று ஒருவர் கூறினால் உடனே நம்பிவிடவேண்டும் என்று கூறுகிறீர்களா? அப்படியென்றால் இரண்டு பேர் நான் இறைதூதர் அவர் இறைதூதர் இல்லை என்று கூறினால் யாரை நம்புவீர்கள்? இருவருமே ஒரு சில வித்தைகளை
செய்து காட்டுகிறார்கள். இருவரும் எனக்கு இறைவன் கொடுத்த சான்று இது என்று கூறுகிறார்கள். யார் உண்மையான இறைதூதர் என்று நம்புவீர்கள்?

//
ஒரு முதலாளி தன் வெலைக்காரனை அனுப்பி தனக்குத் தேவையான பொருட்களை வாங்கி வரச் சொல்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அந்த முதலாளியால் கடையில் சென்று வாங்குவதற்கு இயலாது. அதனால்தான் அவர் வேலையாட்களை வைத்துள்ளார் என்று நாம் கூற மாட்டோம். அவரால் அந்தக் காரியத்தை செய்ய முடியும்.
என்றாலும் அவர் தனது அந்தஸ்து காரணமாகவோ அல்லது வேறு காரணங்களுக்கோ கூட வேலையாட்களை வைத்திருக்கலாம். இந்த உதாரணத்தை உங்கள் கேள்வியோடு பொருத்திப் பாருங்கள். உங்கள் கேள்விக்கான விடை கிடைக்கும்.
இறைவனால் முடியாதது ஒன்றும் இல்லை. ஆனால் இங்கு மனிதர்களை நேர்வழிப் படுத்த வேண்டும். மனிதர்களை நேர்வழிப் படுத்த மனிதர்களைத்தான் தூதராக அனுப்ப முடியும். ஒரு மனிதன் எப்படி இறை வணக்கம் புரிவது? எப்படி திருமணம் செய்து கொள்வது? கொடுக்கல் வாங்கலை எவ்வாறு அமைத்துக் கொள்வது? மாற்று மதத்தவரோடு எவ்வாறு நடந்து கொள்வது? என்பதை எல்லாம் ஒரு மனிதன்தான் செய்து காட்ட முடியும். பிரச்சாரம் பண்ணும் போது எதிர்ப்புகள் வரலாம். நாடு கடத்தப் படலாம். சில நேரங்களில் கொலையும் செய்யப் படலாம். இதற்கு முந்திய சமுதாயங்களில் கூட சில நபிமார்கள் கொல்லப் பட்டும் இருக்கிறார்கள். சில நபிமார்களுக்கு ஆட்சி அதிகாரத்தையும் இறைவன் கொடுத்துள்ளான். எனவே தான் மனிதர்களுக்கு வழிகாட்டியாக இறைவன் மனிதனையே அனுப்புகிறான். இந்த ஏற்பாடுஇல்லாமல் வேறொரு ஏற்ப்பாட்டை இறைவன் செய்திருந்தால் 'மனிதர்களாகிய எங்களுக்கு எங்களிலிருந்து ஒரு வழிகாட்டியை இறைவன் அனுப்பியிருக்கக் கூடாதா?' என்று மாற்றியும் கேட்பான் மனிதன்.
இறைவனே மிக அறிந்தவன்.
///


கேள்வி மிக எளியது. ஒருவர் இறைதூதர் என்பது யார் யாருக்கெல்லாம் நிச்சயமாக தெரியும்? ஒன்று அந்த இறைதூதருக்குத் தெரியும். அவரை அனுப்பிய இறைவனுக்குத் தெரியும். அல்லது இறைவனிடமிருந்து வானவர் வந்திருந்து மக்களுக்கு சாட்சியம் சொன்னால், அந்த வானவருக்கு தெரியும்.

ஒருவர் வந்து "வானவர் வந்து சொல்ல வேண்டியதுதானே என்று கேட்கிறாய். சாட்சி கொடு என்று கேட்கிறாய். அதெல்லாம் காட்டியும் பல இறைதூதர்களை நீ கொன்றுவிட்டாய். அதனால், நான் உனக்கு எந்த விதமான சாட்சயமும் தரமாட்டேன். நீ நம்பிக்கையுள்ள சமுதாயமாக என்னை நம்ப வேண்டும்" என்று சொன்னால் நீங்கள் உடனே அவரை இறைதூதர் என்று நம்ப ஆரம்பித்துவிடுவீர்களா? ஹிட்லர் "கடவுள் நம்முடன் இருக்கிறார்" என்று மக்களை நம்ப வைத்தார். இங்கிலாந்து பேரரசி தன்னை கடவுளால் நியமிக்கப்பட்டவர் என்று கூறிக்கொள்கிறார். இதே போல பிரான்ஸ் அரசர்களும் கூறிக்கொண்டார்கள். பஹாவுல்லா தன்னை இறைதூதர் என்று கூறிக்கொண்டார். ஜப்பானிய அரசர் தன்னை இறைவனின் வம்சம் என்று கூறிக்கொண்டு 1600 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே வம்சத்தினராக ஆட்சி செய்துவருகிறார்கள்.

இப்படி கேள்வி கேட்காமல் நம்புபவர்களை, நம்பிக்கையுள்ள சமுதாயம் என்று இறைவன் போற்றுவாரா? மேற்கண்டவர்களில் யார் உண்மையைச் சொல்கிறார் என்று நாம் நம்புவது? கடவுள் உன்னை நியமித்தார் என்பதற்கு சாட்சியம் கொடு என்று கேட்பதில் என்ன தவறு இருக்கிறது?

சரி அப்படி ஒரு தெளிவான அடையாளத்துடன் ஒரு இறைதூதரை அனுப்பினால், மனிதன் "ஒரு அடையாளமும் இல்லாமல் எங்களிலிருந்து ஒரு வழிகாட்டியை இறைவன் அனுப்பியிருக்கக்கூடாதா?" என்று கேட்பானா?

மனிதனையே அனுப்பட்டும்.

ஆனால் எந்த வித சந்தேகத்தும் இடமின்றி தெளிவான அடையாளத்துடன் அனுப்பட்டும் என்று சொல்கிறேன். பொய் இறைதூதர்களிடம் ஏமாந்து விடாமல் காப்பதற்கு மிகவும் அறிந்த இறைவன் ஏற்பாடு செய்ய வேண்டுமல்லவா?

கடவுள் ஒரு சாட்சியம் கொடுத்தால் அதனை மனிதனால் மறுக்க முடியுமா? யானையை யானை என்று ஒரு குழந்தை கூட சொல்லிவிடும். புறாவை புறா என்று குழந்தை கூட சொல்லிவிடும். இதற்கு நிரூபணம் வேண்டாமே? அப்படிப்பட்ட தெளிவான குழப்பமில்லாத அடையாளத்துடன் ஒரு இறைதூதரை அனுப்புவது இறைவனுக்கு கடினமானதா என்ன?

முதலாளி வேலைக்காரனை வெறுமே வைத்துக்கொள்வதில்லை. ஒரு காரணத்துடன் தான் வைத்துக்கொள்கிறார். அவருக்கு நிறைய வேலை இருக்கலாம். அவருக்கு இந்த சின்ன வேலையைச் செய்வதற்கு நாமே ஏன் செய்ய வேண்டும். இவர் செய்யட்டும் என்று ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஒப்புக்கொள்கிறேன்.

ஆனால், அந்த வேலைக்காரனை ஒருவரிடத்தில் அனுப்பி "என் சார்பாக இவனை அனுப்புகிறேன். இவன் சில விஷயங்களை எப்படி செய்வது என்று சொல்லித்தருவான். அது படி நடவுங்கள்" என்று அனுப்பி வைக்கிறார் என்று வைத்துக்கொள்வோம்.

அப்போது அந்த முதலாளி இந்த வேலைக்காரன், என் வேலைக்காரன் தான் என்பதற்கு அனுப்பியவரிடம் சாட்சியம் அனுப்பி வைக்க வேண்டும். இல்லையென்றால் கண்டவனெல்லாம் நான் தான் அந்த முதலாளியின் வேலைக்காரன் என்று சொல்லிக்கொள்வான். முதலாளி அனுப்பும் அந்த சாட்சியம், அதனை பெறப்பட்டவர் நம்பும்படி இருக்க வேண்டும். ஒவ்வொருவனும் ஒவ்வொரு வித்தை செய்து காண்பித்து, "நான் தான் அந்த முதலாளியின் வேலைக்காரன். அவன் சொல்வதை நம்பாதே, நான் சொல்வதை நம்பு" என்றால் குழப்பமே மிஞ்சும்.

முதலாளி உண்மையிலேயே ஒரு வேலைக்காரனை அனுப்பினால், அவர் நிச்சயம் குழப்பமில்லாமல் தன்னுடைய வேலைக்காரனை அடையாளப்படுத்திவிடுவார்.

அப்படி குழப்பமில்லாத தெளிவான அடையாளம் கொண்ட வேலைக்காரன் வரவில்லை என்றால், முதலாளி எந்த வேலைக்காரனையும் அனுப்பவில்லை என்றுதான் பொருள்.


இந்த கருத்துக்களை யோசித்து எழுத தூண்டிய சகோதரர் பொதக்குடியன், சகோதரர் இப்னுபஷீர் அவர்களுக்கும், சகோதரர் சுவனப்பிரியனுக்கும் மிக்க தாழ்மையான நன்றிகள்

16 comments:

Anonymous said...

Excellent post.

Another clear post.

You are way too good.

Anonymous said...

எழில்,

சேர மன்னர் சந்திரன் இரண்டாக இருப்பதை பார்த்து இஸ்லாமில் இணைந்தார் என்பதெல்லாம் இஸ்லாமியர் விடும் கதை. உண்மையான காரணம், அரபு கப்பல் கொள்ளைக்காரர்களால் முசிறிக்கு வந்துகொண்டிருந்த கப்பல் வணிகம் பாதிக்கப்பட்டது. இதனால், அரபு கப்பல் வணிகர்களை தன் பக்கம் வைத்துக்கொள்வதன் மூலம் கொள்ளைக்காரர்களை அடக்கி மீண்டும் முசிறியை வணிகத்தளமாக்க முடியும் என்று கருதினார். இதனால், இஸ்லாமில் சேர்ந்தால் அரபு வணிகர்கள் உங்கள் பக்கம் இருப்பார்கள் என்று அரபு வணிகர் தலைவர் கூறினார். இதற்காக அவர் இஸ்லாமில் இணையவும், வணிக உறவுக்காகவும் அரேபியா பயணம் செய்தார். அவர் இஸ்லாமிய வணிகர்களுக்கு இடம் கொடுத்து அவர்கள் மசூதி கட்ட பணமும் கொடுத்தார். ஆனால் அவர் இஸ்லாமில் இணைந்தார் என்று சொல்வது எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை. ஏனெனில் அரபியாவுக்கு சென்ற அவர் முஹம்மதுவை பார்த்த புண்ணியத்தாலோ என்னவோ இந்தியாவுக்கு வரும் முன்னாலேயே மரணமடைந்துவிட்டார். (சேர மன்னர்கள், முசிறி துறைமுகத்துக்கு அகதியாக வந்த சிரிய கிரிஸ்துவர்களுக்கும் யூதர்களுக்கும் இதுபோலவே இடம் கொடுத்து அவர்கள் தங்கள் மதத்தை சுதந்திரமாக பின்பற்ற கோவில் கட்ட எல்லாம் பணம் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் கிரிஸ்துவர்களும் அங்கு வந்த அரபு முஸ்லீம்களும் உண்ட வீட்டுக்கு ரெண்டகம் பண்ணுபவர்களாகவே இருந்திருக்கிறார்கள்.)

இறைதூதர் என்ற கருத்தாக்கமே இந்து மதத்தில் இல்லாத போது, எப்படி ஜோதிடர்கள் வேதங்களில் இறைதூதரை பற்றி எழுதியிருப்பதை பார்த்திருக்க முடியும்?

யாராவது பைபிளில் ராமாவதாரம் பற்றி எழுதியிருப்பதை யூத குருமார்கள் பார்த்து இயேசுவிடம் சொன்னார்கள் என்று எழுதினால் ஏதாவது யூதர்கள் நம்புவார்களா? ஏனெனில் அவதாரம் என்ற கருத்தாக்கமே பைபிளில் இல்லை. அப்படி இருக்கும் போது எப்படி யூத குருமார்கள் ராமாவதாரம் பற்றி சொன்னார்கள் என்று சொன்னால் சிரிக்க மாட்டார்கள்?

அது போல இறைதூதர் என்ற கருத்தாக்கமே இந்து மதத்தில் இல்லாதபோது எப்படி இறைதூதரை பற்றி ஜோதிடர்கள் சொல்ல முடியும்?

ஜோதிடத்தின் அடிப்படையே முற்பிறவிதான். முற்பிறவியின் கரும பலன்களை பிறப்பின் நேரத்தை வைத்து ஊகிப்பதுதான் இந்திய ஜோதிடம். அப்படியென்றால் இஸ்லாமியர்கள் முற்பிறவி கருத்தை ஒப்புக்கொள்கிறார்களா?

bala said...

எழில் அய்யா,

தாங்களும், திரு கவனப்பிரியன் அவர்களும் அருமையான,ஆரோக்யமான விவாதத்தில் ஈடுபட்டுள்ளீர்கள்.

நடத்துங்கள்.

It must be said that Kavanappiriyan has a weak case to defend,(logically speaking).

பாலா

எழில் said...

நன்றி பாலா, நன்றி நல்லவன், நன்றி ஒரிஜினல் திம்மி,

சுவனப்பிரியன் அவர்களும், ஒரிஜினல் திம்மி அவர்களும் இந்த பதிவின் முக்கிய கருதுகோளை கவனிக்க வேண்டுகிறேன்.

இது ஜனாப் முகம்மது நபி அவர்கள் இறைதூதரா அல்லவா என்பதனை பேசவில்லை.

ஒன்றுக்கும் மேற்பட்ட மனிதர்கள் தங்களை இறைதூதர்கள் என்று கோரி சில அற்புதங்களை செய்தால் எந்த அடிப்படையில் நாம் ஒரிஜினல் இறைதூதர் டூப்ளிகேட் இறைதூதர் என்று கண்டுபிடிப்பது என்பதுதான். இறைவன் உண்மையிலேயே இறைதூதர்களை தொடர்ச்சியாக அனுப்பி வந்தால் எல்லா இறைதூதர்களுக்கும் பொதுவான அடையாளத்தை கொடுத்திருப்பானே, அல்லது சந்தேகத்துக்கு எந்த விதமான இடமும் இல்லாமல் இதுதான் இறைதூதர் இது இறைதூதர் அல்ல என்று மனிதர்கள் க்ண்டுகொள்ள தெளிவான அடையாளத்தை கொடுத்திருப்பானே என்பதுதான்.

நன்றி
எழில்

Anonymous said...

நன்றி ஒரிஜினல் திம்மி

ஒரு மதத்தில் இணைபவர்கள் பல அற்புத காரணங்களை காட்டி உண்மையான காரணத்தை அதிகம் பேசாமல் இருப்பது பல நேரங்களில் நடப்பதுதான். கணவனுக்காக அவனது மதத்தில் இணைபவர்கள் சில வேளைகளில் கணவனை விட அதிகமாக அந்த மதத்தினை பின்பற்றுவதையும் பார்க்கலாம். இஸ்லாமில் நான் ஏன் இணைந்தேன் என்று பல வாக்குமூலங்களை இஸ்லாமிய தளங்களில் பார்க்கலாம். இஸ்லாம் அப்படிப்பட்டது இப்படிப்பட்டது என்று நிறைய எழுதியிருப்பார்கள். கூர்ந்து படித்தால், மனைவியோ கணவனோ ஏற்கெனவே இஸ்லாமில் இருந்திருப்பார்.

நல்லவன்

Anonymous said...

அன்புள்ள எழில்,
மறுபடியும் ஒரு நல்ல பதிவு.
என்றாலும்,
அதனால் என்ன பயன் விளையப்போகிறது என்றுதான் விளங்கவில்லை. ஒரு அங்குலம் கூட உங்களால் இவர்களை நகர்த்தமுடியும் என்று தோன்றவில்லை.
2000 வருடத்திற்கு முன்னதாக உருவாக்கப்பட்டத் திருக்குறள் எவ்வளவு தெளிவாக எழுதப்பட்டுள்ளது என்பதை இந்த உலகம் நன்கு அறியும். இருந்தாலும் அந்த நூலை ஒரு மிகச் சிறந்த கருத்துப் பெட்டகமாகத்தான் நாம் ஏற்றுக் கொண்டிருக்கிறோமே அன்றி அதை கடவுள் அனுப்பிய நூல் என்று நாம் ஒருக்காலும் நம்பியதில்லை. திருவள்ளுவரும் தன்னை ஒரு இறைதூதர் என்று பிரகடனப்படுத்திக் கொண்டதில்லை. தெளிவும், கோர்வையும் அற்ற ஒரு நூலை கடவுள் அனுப்பியதாக சொல்லிக்கொண்டும், தன்னை ஒரு இறைதூதராக பிரகடனப்படுத்திக் கொண்டும், தானே இறுதித் தூதர் என்று சொல்லிக் கொண்டும் ஒருவர் மிகப் பெரிய வெற்றியைக் கண்டார் என்றால் அதற்கு என்ன காரணம் இருக்க முடியும் என்று யோசித்துப் பாருங்கள். இந்த இறைதூதர் technique ஆபிரஹாமிய மதங்களுக்கே உரிய ஒரு பொதுவான தந்திரம். அந்த தந்திரத்தை உண்மை என்று நம்பி இன்று உலக மாந்தர்கள் முட்டிக் கொண்டும் மோதிக் கொண்டும் அலைகிறார்கள். திருக்குறள் கண்ட இந்த புண்னியபூமியும் இவர்களின் யுத்தகளமாகப் போனதுதான் மிகப் பெரிய சோகம். எனவே, நீங்கள் இப்படி எழுதிக் கொண்டு போனால் அவர்கள் கோபத்திற்குதான் ஆளாக நேருமே அன்றி,அவர்கள் உண்மையை உணரப் போவதுமில்லை, ஒப்புக்கொள்ளப் போவதுமில்லை என்பதுதான் யதார்த்தம்.
வேறு நல்ல தலைப்பை தேர்ந்தெடுத்து எழுதுங்கள்.

Anonymous said...

ஒரிஜினல் திம்மியின் கேள்விகள் மிகவும் நச்சென்று இருக்கின்றன. இயெசுவின் வீட்டின் முன் நட்சத்திரம் நின்றதை சீனர்களது ஆவணங்களிலிருந்து நிரூபிக்க சிலர் முயன்றார்கள்.

இவர்கள் நம்பும் சில கருத்துக்களை நிருபிக்க மனதறிந்து பொய் சொல்வதையும் இட்டுக்கட்டுதல்களையும் கூச்சமில்லாமல் செய்கிறார்கள்.

நீங்கள் கேட்கும் இறைதூதர்களுக்கான பொதுவான அடையாளம் என்ன என்ற கேள்விக்கு எந்த பதிலையும் காணவில்லை.

நல்ல பதிவு. ஆழமான பதிவு.

Anonymous said...

வலைப்பதிவில் கூட ஆழமான கருத்துக்கள் வரலாம் என்பதற்கு இந்த பதிவு ஒரு உதாரணம்

வெல்டன் எழில்

- உங்கள் கவிதைகளும் நன்றாக இருக்கின்றன

Anonymous said...

எழில்,
உங்கள் அத்தனை கேள்விகளுக்கும் இங்கே பதில் இருக்கிறது.

www.Faithfreedom.org
"Should Every Muslim Emulate Prophet Muhammad as Their Model?"
Author: Syed Kamran Mirza on Saturday, October 21, 2006

படித்து புரிந்து கொள்ளுங்கள்.

Anonymous said...

இப்னுபஷீர் இப்போது எழுதியிருக்கும் பதிவுக்கும் சேர்த்து பதில் எழுதிவிட்டீர்கள் போலிருக்கிறதே. தீர்க்கதரிசிதான் நீங்கள் :-))

Anonymous said...

அருமையான பதிவு. பின்னூட்டங்களும் நச்சென்று இருக்கின்றன.
பிறப்பால் பெற்ற மதத்தையும், இன்றைய பிரச்சாரத்தையும் ஒதுக்கிவிட்டு சிந்திப்பது கடினம் என்றாலும் உங்களது முயற்சி பாராட்டத்தக்கது

suvanappiriyan said...

சகோதரர் எழிலுக்கு!

//கிரிஸ்துவர்களின் இணையப்பக்கங்களில் குரானின் நடை மிகச்சாதாரணமானது, என்று எழுதப்பட்டிருப்பதை பார்க்கலாம்)//

அவர்கள் சொல்வது உண்மையே! குர்ஆன் மிக உயர்ந்த இலக்கிய நடையில் இருக்கும். அதே சமயம் சாதாரண மனிதர்களுக்கும் விளங்கக் கூடிய வகையில் தெளிவாக இருக்கும். நீங்கள் குர்ஆனின் மொழி பெயர்ப்பை படிப்பது போல் பைபிளை அவ்வளவு சுலபமாக படித்து விட முடியாது. அதே போல் காளிதாசனோ கம்பனோ எழுதிய ஆக்கங்களை சாதாரண பாமரன் புரிந்து கொள்வது சிரமம். இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட தொனியில் குர்ஆன் அமைந்திருப்பதையே இது ஒரு இறை வேதம் என்பதற்கு சான்றாகக் கூறலாம். அதேபோல் ஒரே மனிதரிடமிருந்து இரண்டு தன்மைகள் வெளிப்படுவது மிக அரிது. என் எழுத்து நடையையும் உங்களின் எழுத்து நடையையும் பதிவை தொடர்ந்து படித்து வருபவர்கள் எளிதில் கண்டு பிடித்து விடலாம். அப்படியே என் நடையை நான் திறமையாக மாற்றினாலும் ஒரு நாள் அல்லது பத்து நாட்களுக்கு மேல் என்னால் தாக்கு பிடிக்க முடியாது. ஆனால் முகமது நபியோ இந்த குர்ஆனை இறைவனிடமிருந்து வாங்கித் தந்தது இருபத்தி மூன்று வருடங்கள் எனபதையும் நாம் மறந்து விடக் கூடாது. அன்றைய அரபு பண்டிதர்களே (இஸ்லாத்தை ஏற்காதவர்கள்) குர்ஆனின் நடை அழகைப் பார்த்து ஆச்சரியப் பட்டனர். 'இது கண்டிப்பாக முகமதின் வார்த்தைகள் கிடையாது. ஆனால் இந்த செய்தி எங்கிருந்து வருகிறது என்பது தான் மர்மமாக இருக்கிறது' என்று தங்களுக்குள் பேசிக் கொள்வார்கள். அந்த பண்டிதர்களே முடிவில் இது இறை வாக்குதான் என்று நம்பி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதைப் பார்க்கிறோம்.

//ஒரு இறைதூதர் தனது புத்தகத்தில் எந்த விதமான உலக விஷயங்களும் இல்லாமல் வெறும் நல்வாழ்வுக்கான அறிவுரைகள் மட்டுமே எழுதியிருக்கலாம். அதனால் அந்த புத்தகம் அறிவியலுக்கு பொருந்துமா இல்லையா என்ற விவாதத்துக்கே இடமில்லாமல் இருக்கலாம். அல்லவா?//

ஒரு மதத்தின் பிரச்சாரத்துக்கு 'நீ தொழ வேண்டும், நோன்பு வைக்கவேண்டும், மெக்கா புனிதப் பயணம் செல்ல வேண்டும்' என்று ஆன்மீகக் கட்டளைகளை மட்டுமே இறைவன் குர்ஆனில் கொடுத்திருக்க முடியும். ஆனால் 'ரோம சாம்ராஜ்ஜியம் வெற்றி பெறும் என்ற முன்னறிவிப்பு : பூமியில் மட்டுமே மனிதனால் வாழ முடியும, ஒரு வருடம் என்பது பன்னிரண்டு மாதங்கள் தான்,புவி ஈர்ப்பு சக்தியைப்பற்றிய முன்னறிவிப்பு, சூரியனும் சந்திரனும் அதனதன் பாதையில் நீந்திச் செல்கின்றன என்ற அறிவிப்பு, அனைத்து படைப்புகளிலும் ஜோடியைப் படைத்துள்ளேன் என்ற அறிவிப்பு, ஓரங்களில் பூமி குறைகிறது என்ற அறிவிப்பு, மலைகளை முளைகளாக நாட்டியிருக்கிறேன் என்ற அறிவிப்பு, பால் வயிற்றில் எவ்வாறு சுரக்கிறது என்ற உண்மை, இரு கடல்களுக்கிடையே தடுப்பு, மனிதர்களின் எடைக்கேற்ப பூமியின் எடையும் குறையும் என்ற அறிவிப்பு, ஆணும் பெண்ணும் சேர்ந்து உருவான கலப்பு விந்திலிருந்தே உயிரினம் உருவாதல் என்ற உண்மை, தேன்எவ்வாறு உற்பத்தியாகிறது என்ற உண்மை, விண்வெளிப்பயணம் சாத்தியமே என்ற உண்மை, கர்ப்ப அறையின் தனித் தன்மை, விரல் ரேகைதான் மனிதனின் முக்கிய அடையாளம் என்ற உண்மையைக் கூறுதல் ,மனிதன் மலைகளின் உயரததிற்கு பூமிக்கு அடியில் செல்ல முடியாது என்ற உண்மை போன்ற அந்த மக்களுக்கு அவசியம் இல்லாத செய்திகளை சொல்ல வேண்டிய அவசியம் என்ன?

பிற்காலத்தில் மக்கள் அறிவு வளர்ச்சி பெற்று 'இதை இறை வேதம் என்று எப்படி ஒத்துக் கொள்வது?' என்று எழிலைப் போல் கேள்வி கேட்பவர்களுக்கு பதிலளிக்கத்தான் இந்த உண்மைகளை இறைவன் கோடிட்டுக் காட்டுகிறான். ஒன்று இரண்டல்ல குர்ஆன் முழுக்க இது போல் பல நூறு வசனங்கள். அறியாமைக் காலத்தில் வாழ்ந்த எழுதவும் படிக்கவும் தெரியாத ஒரு குருட்டு சமூகத்தில் தோன்றிய முகமது நபி எவ்வாறு இந்த உண்மைகளை சொல்ல முடியும்? எனபதற்கான உங்கள் பதில் என்ன? அதே போல் குர்ஆன் கோடிட்டுக் காட்டும் எந்த உண்மையையும் இது வரை எந்த அறிவியல் அறிஞரும் மறுக்கவில்லை என்பதற்கும் உங்கள் பதில் என்ன?

நம் திருக்குறளை உதாரணத்திற்கு எடுத்துக் கொள்வோம். நான் தமிழன் என்ற முறையில் திருக்குறள் நம்மிடம் இருப்பதற்கு நானும் பெருமை படுகிறேன்.இரண்டு அடிகளில் திருவள்ளுவர் சொல்லும் கருத்துக்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தும். இத்தகைய பெருமை வாய்ந்த குறளிலும் சில குறைகளைக் காட்டமுடியும். உதாரணத்திற்கு ஒன்றை எடுத்துக் கொள்வோம்.

கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
திங்களைப் பாம்பு கொண்டற்று
115 - அதிகாரம்: களவியல்

நான் என் காதலரைக் கண்டது ஒருநாள் தான். ஆனால் அதனால் உண்டான அலரோ, நிலாவைப் பாம்பு கௌவியது போல் என் உடல்எங்கும் பரவியுள்ளது.

இந்த இடத்தில் வள்ளுவர் சிவன் தலையைக் கற்பனை செய்து அன்றைய மக்களின் கிரகணக் கதையை தன் குறளில் எடுத்தெழிதியுள்ளார். இதே போல் பல குறள்களை என்னால் காட்ட முடியும். அந்த கால மக்களின் நம்பிக்கைக்கு அது சரி. இப்பொழுதும் அந்த கருத்தை நீங்கள் ஒத்துக் கொள்வீர்களா? மனிதர்கள் எழுதியதில் இது போன்ற குறைகள் வருவது சகஜம். இது போன்று குர்ஆனில் இன்றைய அறிவியலோடு மோதக் கூடிய ஒரு வசனத்தைக் காட்டுங்கள். மேற்கத்திய அறிவியலார் ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு முயற்ச்சித்து முடிவில் தோல்வியையே தழுவி பிறகு இஸ்லாத்தை தழுவியதாகத்தான் வரலாறு.

//பல மந்திரவாதிகள் ஒன்றுமில்லாத தொப்பியிலிருந்து ஏராளமான பறவைகளை உற்பத்தி பண்ணுகிறார்கள். அவர்கள் எல்லோரும் இறைதூதர்களா?
ஏன் இப்போது கூட சுவிசேஷ கூட்டங்களில் பிறவிக்குருடரையும் முடமானவர்களையும் நடக்கவைக்கும் வித்தைகளை பார்க்கலா//

அற்புதங்கள் இரண்டு வகைப்படும். ஒன்று தந்திரம். மற்றது இறைவனின் செயல். நீங்கள் சொல்லும் மந்திரவாதிகள் அந்த அரங்கத்தில் சில செட்டப்களை செய்து நம் கண்களை மறைத்து சில புறாக்களை வரவழைப்பார்கள். இது தொடருமென்றால் அவர் மேஜிக் தொழிலை நம்ப வேண்டியது இல்லை. தன் வீட்டிலேயே இது போன்ற புறாக்களை உற்பத்தி செய்ய முடியும். அது முடியாததால்தான் நம்மிடம் பத்து இருபது என்று டிக்கெட் போடுகிறார்.

இது போன்ற ஒரு சம்பவம் இறைத் தூதர் மோசேயின் வாழ்க்கையிலும் நடந்துள்ளது. மோசே சில அற்புதங்களை பிரவுன் என்ற அரசனுக்கு முன்னால் தான் இறைத் தூதர் தான் என்பதை நிரூபிப்பதற்காக செய்து காட்டினார். அந்த அரசனோ இதைவிட சிறந்த மந்திரவாதிகளை அழைத்து வந்து மோசேயோடு போட்டியிட வைத்தான். அந்த போட்டியில் மூசாவே வெற்றி பெறுகிறார். இவரிடம் உண்மை இருக்கிறது என்று உணர்ந்து கொண்ட சூன்யக் காரர்கள் மூசாவின் மார்க்கத்தை ஏற்று முஸ்லிம்களாகிறார்கள். 'என் அனுமதி இன்றி மூசாவின் மார்க்கத்தை நீங்கள் எப்படி ஏற்கலாம்?' என்ற பிர்அவுன் அவர்களை கழுவிலேற்றியும் மாறு கால் மாறு கை வாங்கியும் அந்த சூன்யக் காரர்களை இறை நேசர்களாக்கினான்.

இந்த சூன்யக் காரர்களின் நெஞ்சுறுதியை கண்டு வியந்து போன பிர்அவுனின் மனைவி ஆசியாவும் இஸ்லாத்தை ஏற்கிறார். 'உண்மை மூசாவிடம் இருக்கிறது. நீ சொல்வது அனைத்தும் பொய்' என்று பிர்அவுனிடமே ஆசியா அவர்கள் சொல்ல ஆரம்பிக்கிறார்.

இந்த சம்பவத்தில் அந்த சூன்யக்காரர்களுக்கே மூசா செய்வது சூன்யம்அல்ல. அது இறைவனின் புறத்திலிருந்து கிடைத்த சக்தியால் என்பது அவர்களுக்கு விளங்கியது.

அதே போல் முன்பு இறைவனின் உதவி கொண்டு ஏசு முடவர்களைக் குணமாக்கினார். குருடர்களை பார்க்கச் செய்தார். ஏசுவுக்குப் பிறகு முகமது நபியோடு இது போன்ற அற்புதங்கள் வரும் வாசல் அடைபட்டு விட்டது. இந்த காலத்தில் சுவிஷேஷக் கூட்டங்களில் இது போன்ற அற்புதங்கள் எவ்வாறு நிகழ்த்தப் படுகிறது என்பதை கிறித்தவர்கள் தான் விளக்க வேண்டும்.

//இறைவனும் தன் இறைதூதர்கள் அனைவருக்கும் பொதுவான ஒரு அடையாளத்தை அனுப்பியிருக்க வேண்டும்.//

இறைத் தூதர்கள் அனைவருக்கும் பொதுவான அடையாளமாக 'நபித்துவ முத்திரை'யைக் கூறலாம். இது அனைத்து தூதுவர்களுக்கும் அவர்களின் முதுகு பக்கத்தில் (இரண்டு புஜங்களுக்கு இடையில்) முட்டைவடிவத்தில் ஒரு அடையாளம் இருக்கும். இதைப் பார்த்தே பல யூதர்கள் இவர் உண்மையான நபிதான் என்ற முடிவுக்கு வந்து முஸ்லிமான வரலாறும் உண்டு.

'நான் முகமது நபி அவர்களின் இருபுஜங்களுக்கிடையே முத்திரையைப் பார்த்தேன். அது சிவந்த சதைத் துண்டாக புறாவின் முட்டை வடிவில் இருந்தது.'
ஆதாரம் : முஸ்லிம் அறிவிப்பவர் : ஜாபிர் பின் சமுரா

உடனே அது போன்ற அடையாளம் உள்ள அனைவருமே தூதர்களாகி விடலாமா? என்று கேட்கக் கூடாது. இந்த அடையாளமும் இருக்க வேண்டும். அவருக்கு வேதமும் அருளப்பட வேண்டும். அந்த வேதம் எல்லா காலத்துக்கும், எல்லா நாட்டவருக்கும் பொருந்தியும் வர வேண்டும். இறைவன் புறத்திலிருந்து சில அற்புதங்களையும் செய்து காட்ட வேண்டும். இத்தகைய தன்மை கொண்டவரைத்தான் நாமும் தூதராக ஏற்றுக் கொள்ள முடியும். பல பேர் தூதரகள் என்று சொன்னாலும் மேற் சொன்ன ஏதாவது ஒன்றில் சறுக்கி அவரின் உண்மை முகத்தைக் காட்டிக் கொடுத்து விடும்.

மேலும் பல கேள்விகளுக்கு ரம்ஜான்விடுமுறை முடிந்து நான்கு நாட்களுக்குப் பிறகு வந்து என் வாதத்தை வைக்கிறேன். மிகவும் சிரத்தை எடுத்து திறமையாக அதுவும் நாகரீகமாக கேள்விகளை வைக்கும் எழிலுக்கு நன்றிகள்.

என்றும் அன்புடன்
சுவனப்பிரியன்.

suvanappiriyan said...

எழிலின் மற்ற கேள்விகளுக்கான பதில்!

//நான் கேட்டிருக்கும்கேள்விகளை முன்னரே பலர் கேட்டிருக்கிறார்கள் என்றுதான் தெரிகிறது. அவ்வாறு கேட்பவர்களை "அறியாதோர்" என்று அவமானப்படுத்துவது ஏன் என்று தெரியவில்லை? //

இதை விடக் கடினமான கேள்விகளை எல்லாம் அன்றைய அரபுகள் முகமது நபியிடம் கேட்டிருக்கிறார்கள். அனைத்திற்கும் ஆதாரமான பதில்களைத் தந்து முடிவில் அவர்கள் இஸ்லாத்தை ஏற்றதாகத் தான் வரலாறு.

'அறியாதவர்கள்' என்று ஏன் இறைவன் சொல்ல வேண்டும் என்ற கேள்வியை மறுமையில் இறைவனை சந்திக்கும் போது நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். எனக்குத் தெரிந்த வரையில் நான் சிறு விளக்கத்தைக் கொடுக்கிறேன்.

இங்கே உலகம் தோன்றுவதற்கும் உயிர்கள் தோன்றுவதற்கும் வெளியிலிருந்து ஒரு ஆள் தேவைப் பட வில்லை. எல்லாமே தானாக உதித்துக் கொள்ள முடியும் என்று அறிவியல் கூறுகிறது.

கடிகாரம், பூட்டு, சாவி, பானை என்று எந்த செயற்கைப் பொருளைப் பார்க்க நேர்ந்தாலும் அவை யாராலோ செய்யப் பட்டது என்பது நமக்குத் தெரிகிறது. தனக்குத் தானாகவே ஒட்டிக் கொண்டும், பொருந்திக் கொண்டும், உருவாகிக் கொள்ளும் கருவியை மனிதன் இதுவரை கண்டு பிடிக்கவில்லை. எனவே செய்யப் பட்டவைகளுக்கு செய்தவர் உண்டு.

சூரியன், உலகம், உயிர்கள் யாவும் செய்யப் பட்டவைகளா? இல்லையே. எனவே செய்தவர் எவரும் இல்லை.

ஒரு நிமிடம் .... செயற்கைப் பொருட்கள் தாமாக செய்து கொள்ள முடியாதபோது.... இயற்கைப் பொருட்கள் மட்டும் எப்படி செய்து கொள்கின்றன? எனில், ஒரு செய்முறை தகவலின் அடிப்படையில் அவை செய்து கொள்கின்றன என்று அறிவியல் சொல்வதால்....இயற்கைப் பொருட்கள் தோன்றுவதற்கு முன்பாகவே ஒரு 'தகவல்' இருந்திருப்பது உறுதியாகிறது. அந்தத் தகவல் ....எது? யார? என்று சிந்தித்துப் பார்த்தால் நம்மை படைத்தவனைப் பற்றியும் இந்த உலகம் உருவானதன் அதிசயத்தைப் பற்றிய உண்மையையும் மனிதன் விளங்கிக் கொள்வான். இதை எல்லாம் சிந்திக்காமல் இறைவன் என்னிடம் நேரிலேயே வரக் கூடாதா? என்னிடம் பேசக் கூடாதா? என்று நாத்திகத் தன்மையோடு கேட்பதால்தான் அவர்களைப் பார்த்து இறைவன் 'அறியாதோர்' என்று விளிப்பதாக எனக்குப் படுகிறது.

//முதலாளி அனுப்பும் அந்த சாட்சியம், அதனை பெறப்பட்டவர் நம்பும்படி இருக்க வேண்டும். ஒவ்வொருவனும் ஒவ்வொரு வித்தை செய்து காண்பித்து, "நான் தான் அந்த முதலாளியின் வேலைக்காரன். அவன் சொல்வதை நம்பாதே, நான் சொல்வதை நம்பு" என்றால் குழப்பமே மிஞ்சும்.//

நான் முன்பே குறிப்பிட்டது போல் நபித்துவ முத்திரை இருக்க வேண்டும், இறைவனிடம் இருந்து வேதமும் வந்து அது எல்லா நாட்டு மக்களுக்கும் பொறுந்தி அறிவியல் கருத்துகளோடு மோதாமலும் இருக்க வேண்டும். இறைவனின் உதவி கொண்டு சில அற்புதங்களையும் செய்திருக்க வேண்டும், இதற்கு முன் பொய் பேசாதவராகவும் நல்லொழுக்க முடையவராகவும் இருக்க வேண்டும். இத்தகைய தகுதிகள் அனைத்தும் பொருந்தி வருவதால்தான் முஸ்லிம்கள் முகமதை தூதராக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். முகமது நபிக்குப் பிறகும் 'நானும் நபி' என்று சொல்லிக் கொண்டு வந்தவர்களின் பொய்முகங்கள் சில நாட்களிலேயே உலகுக்குத் தெரிய வந்தது.

இறைவனே மிக அறிந்தவன்!

suvanappiriyan said...

ஒரிஜினல் திம்மி!

//இஸ்லாமில் சேர்ந்தால் அரபு வணிகர்கள் உங்கள் பக்கம் இருப்பார்கள் என்று அரபு வணிகர் தலைவர் கூறினார். இதற்காக அவர் இஸ்லாமில் இணையவும், வணிக உறவுக்காகவும் அரேபியா பயணம் செய்தார். //

விருப்பப்பட்டு இஸ்லாத்தில் இணைந்த சேரமான் பெருமாளை உங்கள் வாதத்திற்காக இந்த அளவு கேவலப் படுத்தக் கூடாது. வணிகத்திற்காகவும், ஆட்சியை தக்க வைப்பதற்காகவும் இஸ்லாத்தில் இணைந்தார் என்றே ஒரு வாதத்துக்காக வைத்துக் கொள்வோம். அந்த அளவு அவருடைய முந்தைய மதம் பலவீனப் பட்டுப் போயிருந்தது என்பதை நீங்களே ஒத்துக் கொள்கிறீர்கள்.

மேலும் ஆட்சிக் கட்டிலுக்கு ஆசைப்படும் ஒரு அரசன் பெரும்பான்மை மக்களின் மதத்தை சார்ந்திருப்பானா அல்லது வியாபாரக் கூட்டமான அரபியர்களின் பக்கம் சாய்வானா? இதனால் மக்கள் கொதித்தெழ மாட்டார்களா? ஆட்சியைத் தக்க வைக்கும் ஒரு அரசன் தன்நாட்டை தனது சகோதரன் வசம் ஒப்படைத்து விட்டு அரபு நாடு நோக்கி செல்வானா?உங்கள் வாதத்தில் உங்களுக்கே நம்பிக்கை இருக்கிறதா என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்.

//இறைதூதர் என்ற கருத்தாக்கமே இந்து மதத்தில் இல்லாத போது, எப்படி ஜோதிடர்கள் வேதங்களில் இறைதூதரை பற்றி எழுதியிருப்பதை பார்த்திருக்க முடியும்?//

'ஏ அக்னீ !நியூஹ் அவர் தூதர் என்று ஒப்புக் கொள்கிறேன்.'

1 : 13,14 - ரிக் வேதம்

நோவாவுடைய பெயர் ரிக் வேதத்தில் 51 இடங்களிலும், யஜீர் வேதத்தில் இரண்டு இடங்களிலும், சாம வேதத்தில் எட்டு இடங்களிலும், அதர்வண வேதத்தில் பதினான்கு இடத்திலும் குறிப்பிடப் பட்டுள்ளது

ஆதாரம் வேத ஆராய்ச்சி தொகுப்பான”NOW OR NEVER” – written by Shames Navad



இறைத் தூதர் என்ற கருத்தாக்கமே இந்து மதத்தில் இல்லை என்றால் இந்து மத வேதங்களில் உள்ள இந்த வசனங்களெல்லாம் எங்கிருந்து வந்தது?

1)'ஏ அக்னி! இறந்த இந்த மனிதர் மறு உலகிற்கு செல்வார்'
10 : 16 : 5 - ரிக் வேதம்
2)ஏ கணவன் மனைவியரே! நீங்கள் ஒற்றுமையாய் நல்லறங்கள் செய்யத் துவங்குங்கள். சொர்க்க வாழ்க்கையை உண்மையில் அனுபவிப்பீர்கள்.
6 : 122 : 3 - அதர்வண வேதம்
3)யார் பெரும் பாவியாக, பொய்யனாக, நம்பிக்கையற்றவனாக இருந்தானோ அவன் நரகாஸ்தனத்தில் (நரகத்தில்) இருப்பான்.
4 : 5 : 5 - ரிக் வேதம்

சொர்க்கம் நரகம் போன்றவை அவரவர் செய்த நன்மை தீமைக்கு தக்கவாறு கிடைக்கும் என்று இந்து மத வேதங்களே கூறுவதால் மறுபிறவித் தத்துவம் அடிபட்டுப் போகிறது.

'இந்துவேதங்கள் குறிப்பிடும் புனர் ஜென்மம் என்பது இந்த உலக வாழ்க்கைக்குப் பின் உள்ள மறு உலக வாழ்க்கை ஆகும். திரும்ப திரும்ப ஜன்மம் எடுத்து வரும் வாழ்க்கையல்ல' என்று Dr Farida Ghauhan தன்னுடைய நூலான Punarjanam aur ved (page 93) -ல் கூறுகிறார்.

ஆன்மாவானது மறுபடியும் மறுபடியும் பல ஜென்மம் எடுத்து வரும் என்று எந்த இந்து வேதமும் குறிப்பிடவில்லை என்றுSri Satya Prakash Vidya Lankar தன்னுடைய நூலான Awagawan (Page 104) -ல் குறிப்பிடுகிறார்.

'மறு பிறவித் தத்துவம் என்பது ஒரு கொள்கை அளவில் மட்டுமே இந்து மதத்தில் குறிப்பிடப் படுகிறது. அது உண்மை என்றோ அடிப்படையான தத்துவம் என்றோ கொள்ளப் பட வேண்டியது இல்லை. வேதங்களோ, உபநிஷத்துகளோ இதைக் குறிப்பிடவில்லை.'
-சுவாமி பூமாந்த தீர்த்தர், ஞான பூமி
10 பக்கம்
97 ஏப்ரல்

மரணத்திற்குப் பின் உள்ள மறுமை வாழ்வு பற்றி குர்ஆன் என்ன கருத்து வைக்கிறதோ அதையே தான் இந்து மத வேதங்களும் வைக்கின்றன.

'அந்த அராபியர் தூதர்களுக்கெல்லாம் முத்திரையாக (இறுதியாக) இருப்பார்'
1 : 163 : 1 - ரிக் வேதம்

'ஒரு மிலேச்ச புனிதமான ஆசாரியார் தனது சீடர்களுடன் தோன்றுவார். அவரத பெயர் முகமது ஆகும். அந்த அரபு மகா தேவரை (வானவர் போன்றவரை) 'பஞ்சஹவ்யா' விலும் கங்கை நீரிலும் நீராட்டி (அவரது அனைத்து பாவங்களையும் கழுவி) மனமார்ந்த பெரு மதிப்பையும் பக்தியையும் முன் வைத்துக் கூறுவர்.நான் உமக்குக் கீழ்படிகிறேன். மனித சமுதாயத்தின் பெருமையே! அரபு வாசியே! நீர் தான் சாத்தானை ஒழிக்க ஒரு பெரும் படையை திரட்டி உள்ளீர். நீர் மிவேச்ச நாட்டு எதிரிகளிடமிருந்து பாதுகாக்கப் பட்டவராகவும் உள்ளீர்.நீர் அந்த மேலான பரம் பொருளின் மீது பக்தி கொண்டவருமே அவனின் அம்சமுமாய் இருக்கின்றீர். நான் உமது அடிமை. உமது காலடியில் என்னை ஏற்றுக் கொள்ளும்.'

3 : 3 : 5 - 8 பவிஷ்ய புராணம்

மேற்கள்ட இந்து மத வேதங்களின் கருத்துக்கள் முகமது நபியின் வருகையை முன்னறிவிப்பு செய்கின்றன். இவற்றை எல்லாம் நன்கு ஓதி தெளிந்நிருந்த வேத விற்பன்னர்கள் முகமது நபி வந்திருக்கும் விபரத்தை சேரமானுக்கு அறிவித்திருக்கலாம்.

//ஆனால் கிரிஸ்துவர்களும் அங்கு வந்த அரபு முஸ்லீம்களும் உண்ட வீட்டுக்கு ரெண்டகம் பண்ணுபவர்களாகவே இருந்திருக்கிறார்கள்.)//

எதைச் சொல்கிறீர்கள்? காலங்காலமாக தீண்டாமைக் கொடுமையில் சிக்கி அல்லலுற்ற இந்நாட்டுக் குடிமகனை தன் மதத்தில் இணைத்து அவனை மனிதனாக தலை நிமிர்ந்து நடக்க வைத்ததை சொல்கிறீர்களா? உங்கள் அகராதியில் இதற்கு பெயர்தான் உண்டகத்துக்கு ரெண்டகம் என்றால் அப்படியே இருந்து விட்டு போகட்டும். இன்றைய தேதி வரை உங்களால் பாப்பாரப் பட்டியிலும், கீரிப்பட்டியிலும் ஒரு பஞ்சாயத்து தலைவராக ஒரு தலித்தை கொண்டு வர முடியவில்லையே! போங்க சார்! போய் உங்கள் சீர்திருத்தத்தை அங்கே ஆரம்பியுங்கள். இந்நாட்டு பூர்வ குடிகளை மனிதனை விட கேவலமாக நடத்துவதுதான் 'உண்டகத்துக்கு ரெண்டகம்' என்பேன் நான். இனிமேலும் சீர் திருத்தம் வரவில்லை என்றால் மீதம்உள்ள மக்களும் இஸ்லாத்தை நோக்கி வந்து விடுவார்கள். அதற்குள் அவர்களுக்கு சம உரிமை கொடுக்கப்பாருங்கள்.

//ஜோதிடத்தின் அடிப்படையே முற்பிறவிதான். முற்பிறவியின் கரும பலன்களை பிறப்பின் நேரத்தை வைத்து ஊகிப்பதுதான் இந்திய ஜோதிடம். அப்படியென்றால் இஸ்லாமியர்கள் முற்பிறவி கருத்தை ஒப்புக்கொள்கிறார்களா?//

இஸ்லாமியர்கள் ஒப்புக்கொள்வது இருக்கட்டும். முதலில் இந்து மதத்திலேயே புனர் ஜென்மம் என்பது தவறாக புரிந்து கொள்ளப் பட்டிருக்கிறது என்ற இந்து மத அறிஞர்களின் விளக்கத்தை பார்த்தீர்களா?

suvanappiriyan said...

அனானி!

//என்றாலும்,
அதனால் என்ன பயன் விளையப்போகிறது என்றுதான் விளங்கவில்லை. ஒரு அங்குலம் கூட உங்களால் இவர்களை நகர்த்தமுடியும் என்று தோன்றவில்லை. //

முஸ்லிம்களின் உள்ளஙகளை ஓரளவு சரியாக கணித்திருக்கும் அனானிக்கு நன்றிகள்.!இதற்கு காரணம் எங்களிடம் மனிதக் கரங்கள் புகாமல் பாதுகாக்கப் பட்டிருக்கும் குர்ஆனே! இது இறைவன் அல்லாமல் மனிதர்களால் உருவாக்க முடியாது என்பதை நான் குர்ஆனை ஒவ்வொரு முறை படிக்கும் போதும் உணர்கிறேன். நம்பிக்கை மேலும் அதிகமாகிறதே தவிர குறையக் காணோம். உலக முஸ்லிம்கள் அனைவரின் நிலையும் இதுதான்.

//2000 வருடத்திற்கு முன்னதாக உருவாக்கப்பட்டத் திருக்குறள் எவ்வளவு தெளிவாக எழுதப்பட்டுள்ளது என்பதை இந்த உலகம் நன்கு அறியும்.//

திருக்குறளையும், குர்ஆனையும் ஒரே தரத்தில் வைத்து பார்க்க முடியாது என்பதற்கு முந்தய பின்னூட்டத்திலேயே விளக்கியிருக்கிறேன்.

// இருந்தாலும் அந்த நூலை ஒரு மிகச் சிறந்த கருத்துப் பெட்டகமாகத்தான் நாம் ஏற்றுக் கொண்டிருக்கிறோமே அன்றி அதை கடவுள் அனுப்பிய நூல் என்று நாம் ஒருக்காலும் நம்பியதில்லை. திருவள்ளுவரும் தன்னை ஒரு இறைதூதர் என்று பிரகடனப்படுத்திக் கொண்டதில்லை.//

அது உங்களின் நம்பிக்கை. அதே நம்பிக்கையை முஸ்லிம்களும் கொள்ள வேண்டும் என்றுஎப்படி எதிர்பார்க்கிறீர்கள்?

// அதற்கு என்ன காரணம் இருக்க முடியும் என்று யோசித்துப் பாருங்கள். இந்த இறைதூதர் technique ஆபிரஹாமிய மதங்களுக்கே உரிய ஒரு பொதுவான தந்திரம்.//

ஆபிரஹாமிய மதங்களுக்குள் உள்ளடக்கியதே இந்து மதம் என்று இந்து மத வேதங்களைக் கொண்டே முந்தய பதிவுகளில் விளக்கியிருக்கிறேன். இதை நீங்கள் மறுத்தால் ரிக் யஜூர் சாம் அதர்வண வேதங்களின் ஆசிரியர் யார்? அல்லது யாரால் அருளப்பட்டது? என்ற விபரம்தைக் கொடுங்கள்.

//திருக்குறள் கண்ட இந்த புண்னியபூமியும் இவர்களின் யுத்தகளமாகப் போனதுதான் மிகப் பெரிய சோகம். //

உண்மைதான்! சமணர்களை கழுவில் ஏற்றி கொன்றது, பௌத்தர்களை கொன்று குவித்து புத்த மதத்தை சிறுபான்மை ஆக்கியது, சேர சோழ பாண்டியர்கள் தங்களுக்குள் அடித்துக் கொண்டு ரத்தம் சிந்தியது, ஆதி திராவிடர்களை மலம் திங்க வைத்து கோவிலுக்குள்ளும் அனுமதிக்காமல், வடம் பிடிப்பதற்கும் அனுமதி மறுக்கப்பட்டு, தேர்தலில் வென்ற பஞசாயத்து தலைவரை நடு ரோட்டில் வெட்டிக் கொன்றது போன்ற மாபாதக செயல்களை எல்லாம் வள்ளுவர் அவதரித்த இந்த பூமி கண்டிருக்கிறது. இவற்றை எல்லாம் ஞாபகப் படுத்தியதற்கு நன்றிகள் அனானி!

Anonymous said...

"The mind of a bigot is like the pupil of the eye; the more light you pour upon it, the more it will contract."

Oliver Wendell Holmes
----------------------------------
"The whole problem with the world is that fools and fanatics are always so certain of themselves, but wiser people so full of doubts."

Bertrand Russell.
---------------------------------
' bigot ' என்றால் தாங்கள் சார்ந்துள்ள இனம் அல்லது மதம் அல்லது அரசியல் கட்சி இதன் மேல் கண்மூடித்தனமாகவும், strongly partial ஆகவும் நம்பிக்கைக் கொண்டவர்.