Thursday, October 29, 2009

கன்னியாஸ்திரிகளால் கொத்தடிமை போல நடத்தியதால் தமிழ்ப்பெண் தற்கொலை

மாணவியின் கடிதம் ஏற்படுத்திய பரபரப்பு

Wednesday, 07 October, 2009 12:25 PM


சென்னை,அக்.7:பள்ளி மாணவியின் தற்கொலை விவகாரத்தில் திடீர் திருப்பமாக அவர் எழுதிய கடிதம் கிடைத்ததை அடுத்து, அந்த மாணவியை தற்கொலைக்கு தூண்டிய கன்னியாஸ்திரிகள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
.
தர்மபுரி மாவட்டம், பள்ளிப்பட்டை சேர்ந்தவர் சார்லஸ். இவர் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் சில்வியா மேரி (வயது 16). திருவண்ணாமலையில் 10 ஆம் வகுப்பு வரை படித்து முடித்து விட்டு கன்னியாஸ்திரியாக ஆகும் ஆசையில் சென்னையில் உள்ள ஒரு கன்னியாஸ்திரி மடம் நடத்தி வரும் பள்ளியில் பிளஸ்1 வகுப்பில் படித்து வந்துள்ளார்.

மடத்தில் உள்ள கன்னியாஸ்திரி களுக்கு சமையல் செய்து கொடுத்து அவர்களுடன் சில்வியா மேரி தங்கி படித்து வந்திருக்கிறார்.சில்வியா மேரி கிராமத்தில் படித்ததால் அவருக்கு ஆங்கில அறிவு குறைவாக இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் 10 ஆம் வகுப்பில் குறைந்த மதிப்பெண் வாங்கியதாகவும் கூறப்படுகிறது.

இதையெல்லாம் சுட்டிக் காட்டி அங்கிருந்த சில கன்னியாஸ்திரிகள் சில்வியா மேரியை கொத்தடிமை போல நடத்தி கொடுமைப்படுத்திய தாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த சில்வியா மேரி தனக்கு இங்கு பெரும் கொடுமை நடப்பதாகவும், கேவலமான முறையில் தன்னை நடத்துவதாகவும் கூறி, கன்னியாஸ்திரியாகும் ஆசையே போய் விட்டதாகவும், உடனடியாக தன்னை வந்து இங்கிருந்து கூட்டிச் செல்ல வேண்டும் என்றும் கூறி தனது தாயார் ஜாய்க்கு சில்வியா மேரி கடிதம் எழுதியதாக கூறப்படுகிறது.

ஆனால் அந்த கடிதம் கிடைப்பதற்கு முன்பாக, சில்வியா மேரி பள்ளி வராண்டாவில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நேற்று முன்தினம் காலையில் பள்ளியை திறக்க வந்த காவலாளி ஏகாம்பரம், மாணவி மேரி தூக்கில் தொங்குவதை பார்த்து போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசார் சில்வியா மேரியின் பிணத்தை கைப்பற்றி ஸ்டான்லி மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

தகவலறிந்த சில்வியா மேரியின் பெற்றோர் பள்ளிப்பட்டிலிருந்து விரைந்து வந்து தங்கள் மகளின் உடலை பெற்றுக் கொண்டனர்.கொடுங்கையூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து மேரி தங்கியிருந்த அறையை சோதனையிட்டபோது அங்கும் ஒரு கடிதத்தை கைப்பற்றிய தாக கூறப்படுகிறதுஅதில் மேலே கூறிய தகவல்களை குறிப்பிட்டு தனக்கு வாழ பிடிக்க வில்லை என்று எழுதியிருந்ததாக சொல்லப்படுகிறது.

இதனையடுத்து போலீசார் சில்வியா மேரியை கொடுமைப்படுத்தி அவரை தற்கொலைக்கு தூண்டிய கன்னியாஸ்திரிகள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments: