Saturday, October 12, 2013

தமிழ்நாட்டு முஸ்லீம் பயங்கரவாதிகள் செய்தி போலீஸ் பக்ருதீன், பன்னா இஸ்மாயில் சித்திக்

இந்து பிரமுகர்கள் கொலை தொடர்பாக, கடந்த இரு தினங்களுக்கு முன், சென்னையில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதி, "போலீஸ்'பக்ருதீனுக்கு, ஏழு நாட்கள் போலீஸ் காவல் அளிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, சிறப்பு புலனாய்வு பிரிவினர், அவரிடம் விசாரணையை துவக்கியுள்ளனர். பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கிலும், "போலீஸ்' பக்ருதீனுக்கு தொடர்பிருப்பதால், பெங்களூரு போலீசாரும் விசாரித்து வருகின்றனர். 

வேலூரில், ஜூலை, 1ம் தேதி, இந்து முன்னணி பிரமுகர், வெள்ளையப்பன் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், அதே மாதம், 19ம் தேதி, சேலத்தில், பா.ஜ., மாநிலச் செயலர், ஆடிட்டர் ரமேஷ், அவரது அலுவலகம் அருகே, மூன்று பேர் கும்பலால், வெட்டிக் கொல்லப்பட்டார். முன்னதாக, நாகர்கோவிலில், இந்து முன்னணி பிரமுகர், காந்தி, ஆயுதங்களால் வெட்டி தாக்கப்பட்டார். இந்த சம்பவங்கள், தமிழகத்தில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இதையடுத்து, வேலூர், சேலத்தில் நடந்த கொலைகள் தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி.,யின் கீழ் செயல்படும், சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு, முதல்வர் ஜெ., உத்தரவிட்டார். அவர்கள் விசாரணை நடத்தி வந்த நிலையில், இந்த வழக்குகள் மற்றும் வேறு சில வழக்குகளில் தேடப்பட்டு வரும் குற்றவாளிகளான, மதுரை நெல்பேட்டையைச் சேர்ந்த, "போலீஸ்' பக்ருதீன், பிலால் மாலிக், மேலப்பாளையத்தைச் சேர்ந்த பன்னா இஸ்மாயில், நாகூரைச் சேர்ந்த அபுபக்கர் சித்திக் ஆகியோர் பெயரை, தமிழக போலீஸ் வெளியிட்டது. அத்துடன், அவர்கள் பற்றிய தகவல் தருபவர்களுக்கு, சன்மானமும் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, மேலப்பாளையத்தில் வெடிமருந்துகளுடன் சிக்கியவர்கள் மற்றும் மதுரை, இந்து முன்னணி பிரமுகர், சுரேஷ்குமார் கொலையில் சிக்கியவர்கள் அளித்த தகவல்கள், போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக் மற்றும் பன்னா இஸ்மாயில் ஆகியோர் மீதான சந்தேகத்தை உறுதிப்படுத்தின. இவர்கள் தேடப்பட்டு வந்த நிலையில், திருப்பூரில், இந்து தலைவர் ஒருவரையும், சென்னையில் ஒருவரையும் குறிவைத்து, "போலீஸ்' பக்ருதீன் கும்பல், களமிறங்கியிருப்பது, சிறப்பு புலனாய்வு பிரிவினருக்கு தெரிந்தது. 

பிடித்தது எப்படி? இதையடுத்து, அவர்களின் ரகசிய சங்கேத பாஷைகளை கண்காணித்த, சிறப்பு புலனாய்வு பிரிவினர், உஷாராகினர். சென்னையில், சிறப்பு புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் லட்சுமணன், ரவீந்திரன் ஆகியோர் களமிறங்கி, திருவல்லிக்கேணியில், போலீஸ் பக்ருதீனை கண்டுபிடித்தனர். பக்ருதீனை பின்தொடர்ந்த போலீசார், பெரியமேடு பகுதியில், அவனை பிடிக்க முயன்றனர். இன்ஸ்பெக்டர் லட்சுமணனை தாக்கிவிட்டு, தப்பியோட முயன்ற போது, பெரியமேடு இன்ஸ்பெக்டர் வீரகுமார், பக்ருதீனை பிடித்தார். தொடர்ந்து, பக்ருதீனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கூட்டாளிகளான, பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோர், ஆந்திர மாநிலம், புத்தூரில் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து, அன்றிரவே அங்கு சென்ற போலீசார், ஆந்திர போலீசார் மற்றும் அம்மாநில," ஆக்டோபஸ்' சிறப்பு பிரிவு போலீஸ் உதவியுடன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில், இருவரையும், நேற்று முன்தினம் மாலை, பிடித்தனர். அவர்களுடன் தங்கியிருந்த, பிலாலின் மனைவி, குழந்தைகள் மூவரையும் மீட்டனர். இதில், சிறப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் லட்சுமணன், திருவள்ளூர் ஏ.டி.எஸ்.பி., செந்தில்குமார் ஆகியோர் காயமடைந்தனர். பலத்த காயமடைந்த, இன்ஸ்பெக்டர் லட்சுமணன், போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

இந்த சம்பவத்தில், பயங்கரவாதிகள் தரப்பில், பன்னா இஸ்மாயிலுக்கு, வயிற்றில் குண்டு பாய்ந்தது. கைது செய்யப்பட்டு வேலூர் அழைத்து செல்லப்பட்ட நிலையில், பயங்கரவாதிகள் இருவரில், பன்னா இஸ்மாயிலை மட்டும் சிகிச்சைக்காக, சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். பெருங்குடல் மற்றும் கல்லீரல் இடையே, குண்டு பாய்ந்த நிலையில், பன்னா இஸ்மாயிலுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

போலீசில் சிக்கிய, "போலீஸ்' பக்ருதீன், நேற்று முன்தினம் இரவு, வேலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, சிறப்பு புலனாய்வு பிரிவினர் சார்பில், 13 நாட்கள்விசாரணைக்கு அனுமதி கோரப்பட்டது. பக்ருதீன், விசாரணைக்கு ஒத்துழைப்பதாகக் கூறியதால், மனுவை விசாரித்த, மாஜிஸ்திரேட் சிவகுமார், ஏழு நாட்கள் விசாரணைக்கு அனுமதி அளித்தார். இதையடுத்து, அவர் வேலூரில் ரகசிய இடத்தில் வைக்கப்பட்டார்; விசாரணையும் நடத்தப்பட்டது. தொடர்ந்து, புத்தூரில் கைது செய்யப்பட்ட பிலால் மாலிக், நேற்று வேலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்; அங்கு அவரை, வரும், 18ம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிடப்பட்டதை தொடர்ந்து, சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். மேலும், அவரிடமும் விசாரிக்க போலீசார் முடிவெடுத்துள்ளனர். தற்போது சிக்கியுள்ள மூவரும், வேலூரில், ஜூலை 1ம் தேதி நடந்த வெள்ளையப்பன் கொலையில் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். அடுத்ததாக, மற்ற சம்பவங்களில் கைது செய்யப்படுவர் என, தெரிகிறது. 

விசாரணை : கடந்த ஏப்., 17ம் தேதி, பெங்களூரு, மல்லேஸ்வரத்தில், பா.ஜ., அலுவலகம் அருகில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக, ஏற்கனவே, மேலப்பாளையத்தைச் சேர்ந்த கிச்சான் புகாரி உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்னர். இந்த வழக்கில், "போலீஸ்' பக்ருதீனுக்கும் தொடர்பிருப்பதாக, பெங்களூரு போலீசார் கருதினர். இதன் அடிப்படையில், பெங்களூரு இணை கமிஷனர் ஹேமந்த் தலைமையில் போலீசார், வேலூர் வந்துள்ளனர். அவர்களும், பக்ருதீனிடம் விசாரணை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், "போலீஸ்' பக்ருதீன் மற்றும் பிலால் மாலிக் ஆகியோரிடம் சிறப்பு புலனாய்வு பிரிவினர் நடத்திய முதல்கட்ட விசாரணையில், ஐந்து பேரை கொன்றதாகவும், அத்வானி யாத்திரையில் வெடிகுண்டு வைத்ததையும் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, பரமக்குடியைச் சேர்ந்த முருகன், வேலூரில், பா.ஜ., மருத்துவ அணி செயலர் டாக்டர் அரவிந்த ரெட்டி, மதுரை இந்து முன்னணி பிரமுகர் சுரேஷ்குமார், வேலூர் வெள்ளையப்பன் மற்றும் சேலத்தில் ஆடிட்டர் ரமேஷ் ஆகியோரை, நாங்கள் தான் தீர்த்துக்கட்டினோம் எனவும், ஒப்புக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவர்களை, சம்பவங்கள் நடந்த இடங்களுக்கு அழைத்து சென்று விசாரிக்கவும், சிறப்பு புலனாய்வு பிரிவினர் முடிவு செய்துள்ளனர். இதன் மூலம், இந்து தலைவர்கள் கொலை சம்பவங்களில் இருந்த மர்மங்கள் விலகி, வழக்கில் தெளிவு கிடைக்கும் நிலைமை உருவாகியுள்ளது. 

அபாய கட்டத்தில் பன்னா!வயிற்றில் குண்டு காயத்துடன், சென்னை, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள, பன்னா இஸ்மாயில் அபாய கட்டத்தில்இருப்பதாகக் கூறப்படுகிறது. போலீசார் முதலில் தற்காப்புக்காக, துப்பாக்கியால் சுட்டதில், பன்னா இஸ்மாயில், வயிற்றில் குண்டு பாய்ந்து, அது, கல்லீரல் மற்றும் பெருங்குடல் இடையில் சிக்கியதாகக் கூறப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்ட இஸ்மாயிலுக்கு, டாக்டர்கள் ஆபரேஷன் செய்ய முடிவெடுத்தனர். ஆனால், ஆபரேஷன் செய்து ஒரு வேளை குண்டு எடுக்கப்பட்டால், அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என, டாக்டர்கள் கருதியதால், நிறுத்தி வைத்தனர், அதன் பின், மருத்துவ நிபுணர்கள் ஆலோசனை நடத்திய பின், ஆபரேஷன் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனாலும், இன்னும் அபாய கட்டத்தை தாண்டவில்லை. பன்னா இஸ்மாயில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், அரசு பொது மருத்துவமனையில், 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

பிலால் மாலிக் சிறையில் அடைப்பு:புத்தூரில், சிறப்பு புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட பிலால் மாலிக், வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். ஆந்திர மாநிலம் புத்தூரில், பன்னா இஸ்மாயிலுடன் கைதான பயங்கரவாதி, பிலால் மாலிக், பலத்த போலீஸ் பாதுகாப்புடன், வேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி சிவக்குமார் வீட்டில், நேற்று மாலை, 3:30 மணிக்கு ஆஜர்படுத்தப்பட்டார். பிலால் மாலிக்கை வரும், 18ம் தேதி வரை, நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, பிலால் மாலிக், வேலூர் தொரப்பாடியில் உள்ள மத்திய ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.பிலால் மாலிக் முகத்தை துணியால் மூடி, போலீசார் அழைத்துச் சென்றபோது, "பாகிஸ்தான் வாழ்க; ஜின்னா வாழ்க' என, கோஷமிட்டபடி அவர் வேனில் ஏறினார்.

நன்றி தினமலர்

1 comment:

Unknown said...

yeppadi sir pudichapo neega pakathula irinthagalo