Saturday, July 29, 2006

கண்டம் விட்டுக் கண்டம்


ஆஸ்திரேலியாக் கண்டத்தில் நீருக்கடியில் ஒரு விந்தையான உயிரினம் வாழ்ந்ததாகப் புராணக் கதைகள் கூறுகின்றன. பாம்பு போன்ற வடிவிலான உயிரினம் வானவில்லின் வண்ணங்களைப் பெற்றிருந்தது. பாம்பு போன்ற உடம்பு, கங்காரு அல்லது குதிரை போன்ற தலை, முதலை போன்ற பற்கள், காதுப்பகுதியில் சிறகுகள், செதில் செதிலான நீளமான உடம்பு, மீன் போன்ற வால்-இவ்வளவுக் கலவை அம்சங்கள் கொண்ட அந்த உயிரினத்தை வானவில் பாம்பு என்கின்றனர்.

இந்த வானவில் பாம்புக்கும், சீனத்து புராண மிருகமான டிராகனுக்கும் இடையே பல ஒப்புமைகள் இருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். சீனத்து டிராகனும், மீன் போன்ற செதில்கள் நிறைந்த பாம்பு வடிவிலான உடம்பு, கழுகு போன்ற கூரிய நகங்கள், மானுக்கு இருப்பதைப் போன்ற கொம்பு என்று பல உயிரினங்களின் உருவ அமைப்புக்களை உள்ளடக்கியதாக இருக்கிறது.

இவ்வாறு சீன-ஆஸ்திரேலிய புராண ஒற்றுமைகளைப் பார்க்கும் போது, இந்தப் புராணக் கட்டுக்கதைகளுக்கு வேறு ஏதோ உள்ளர்த்தம் இருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகின்றனர். ஆஸ்திரேலியாக் கண்டத்தின் பூர்வகுடிகள் கிட்டத்தட்ட 40,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வசித்து வருகின்றனர். குரங்கிலிருந்து உருவெடுத்த ஆதிமனிதன் ஆஸ்திரேலியாவில் வாழ்ந்ததாகத் தொல்லியல் சான்றுகள் எதுவுமில்லை. மனிதன் ஓரிடத்தில் மட்டுமே உருவாகி பரிணாம வளர்ச்சி பெற்றிருக்க முடியும். வெவ்வேறு இடங்களில் மனிதன் வளர்ச்சி அடைந்திருக்க முடியாது. ஆகவே, இந்த ஆஸ்திரேலியப் பூர்வ குடிகள் வேறு எங்கிருந்தோ வந்து குடியேறியவர்கள். இவர்கள் தென் கிழக்காசியாவில் இருந்து குடி பெயர்ந்து, ஆஸ்திரேலியாக் கண்டத்தின் வட மேற்குப் பகுதியில் குடியேறினார்கள் என்பதை எவரும் மறுக்கவில்லை. இந்த ஆஸ்திரேலியப் பூர்வகுடிகளின் மூதாதையர்கள் ஆசியப் பெருநிலத்தில் இருந்து, குறிப்பாக பண்டைய சீனாவில் இருந்து வந்திருக்கலாம் என்று ஆஸ்திரேலியக் கலைக்களஞ்சியத்தின் ஐந்தாவது பதிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கருது கோளை வலுப்படுத்தும் வகையில், இந்த இரு பிரிவு மக்களிடையே வரலாற்றுத் தொடர்பு இருந்திருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில், இந்தப் புராண ஒற்றுமை தெரிய வந்துள்ளது.

நீர், உயிர், வானம் ஆகியவற்றுடன் தொடர்புடை வானவில் பாம்பு தான் மனிதனைப் படைத்ததாக ஆஸ்திரேலியப் பூர்வ குடிகள் நம்புகின்றனர். சீனப் புராணங்களிலும் பாம்பு போன்ற உடம்பைக் கொண்ட நுவா தேவதை, மஞ்சள் மண்ணைக் கொண்டு மனிதனை உருவாக்கியதாக நம்பப்படுகிறது.

3 comments:

துளசி கோபால் said...

ஏங்க,
ஆஸ்தராலியாவின் பூர்வ குடிகளுக்கும், தென் இந்தியாவில் இருக்கும் மலைவாசிகள் இருளர்கள்ன்னு
சொல்லப்படுற இனத்தைச் சேர்ந்த மக்களுக்கும் ஒற்றுமை இருப்பதாகப் படிச்சிருக்கேன். அப்புறம்,
அபாரிஜின்களும், நம்மைப் போல விபூதி பூசறாங்க. நாம் சும்மா நெத்தியில் மட்டும். ஆனால் அவுங்க உடம்பு
பூராவும். அவுங்களும் வானத்தைப் பார்த்து நட்சத்திர வெளியைப்பார்த்து சில சாஸ்த்திர சம்பிரதாயங்கள்
செய்றாங்களாமே.

கோண்டுவானா லேண்ட் காலத்தில் இந்தக் கண்டம் எல்லாம் சேர்ந்துதான் இருந்துச்சாம். ட்ரிஃப்ட் ஆனப்ப,
இந்த ஜனங்களும் அதுகூடவே போயிருக்கலாமுன்னும் ஒரு தியரி இருக்குதாம்.

இதைப் பத்தி மேல்விவரம் இருந்தால் தெரிஞ்சுக்க எனக்கும் விருப்பம் இருக்கு.

எழில் said...

நீங்கள் சொல்வதும் உண்மைதான்.

இது ஆஸ்திரேலிய நிலப்பரப்பில் சீனா சொந்தம் கொண்டாட இது போல சில பிரச்சாரங்களை செய்கிறது என்று சிலர் நம்புகிறார்கள்

துளசி கோபால் said...

//இது ஆஸ்திரேலிய நிலப்பரப்பில் சீனா சொந்தம் கொண்டாட இது போல
சில பிரச்சாரங்களை செய்கிறது என்று சிலர் நம்புகிறார்கள்//


ஓஓஓஓஒ இதுவா விஷயம். ஆச்சரியப்பட ஒண்ணுமே இல்லை. இங்கே
நியூஸிலாந்துலேயும் மவோரிகள் ( 1000 வருஷமாச்சு) வர்றதுக்கு முன்னாலேயே
ச்சீனர்கள் வந்து போயிருக்காங்க. நாங்கதான் இங்கே முதல்முதல் வந்த குடிகள்ன்னு
ஒண்ணு கிளப்பி விட்டுருக்காங்க சீனர்கள்