//சகோதரர் எழிலிடம் கேட்ட கேள்விகளுக்கு அவர் தனது பதிவில் பதில் அளித்திருக்கிறார். அவருக்கு என் நன்றிகள். அவரது விளக்கங்களை பார்ப்பதற்கு முன்பாக, எனது டிஸ்கிளைமரை மறுபடியும் நினைவு படுத்திக் கொள்கிறேன். "இந்தப் பதிவில் எந்த விதமான எள்ளலும் இல்லை. கண்ணியமான எனது இந்து மத சகோதரர்களின் மனதை புண்படுத்தும் நோக்கமும் இல்லை. எழில் என்பவர் 'இந்து மதம் வாருங்கள்' என்று இஸ்லாமியர்களுக்கு அழைப்பு விடுத்ததால் அவரது பாணியிலேயே சிலதை தெளிவு படுத்திக் கொள்ளலாமே என்பதற்காக கேட்கும் சில கேள்விகள்தான் இவை." இந்து மதம் பற்றி நான் அதிகம் அறியாதவன். எனது கேள்விகள் யாரையும் புண்படுத்தி விடக்கூடாதே என்ற அச்சத்தினால்தான் இதை இங்கே வலியுறுத்துகிறேன்.
//
அன்பு சகோதரர் மரைக்காயர்,
நீங்கள் நிச்சயமாக என் மனத்தை புண்படுத்தவில்லை என்று கூறுகிறேன். நான் மட்டுமல்ல, பல கோடி இந்துக்களும்கூட பெரியார் இதனைவிட மிகவும் அசிங்கமாக இந்து மதத்தை திட்டியதை கேட்டார்கள். அவரை யாரும் அடிக்கவில்லை. முதிர்ந்த வயதில்கூட அவருக்கு நெருங்கிய நண்பர்களாக ராஜாஜி காந்திஜி போன்றவர்கள் இருந்தார்கள். அவரது விமர்சனத்தை காதுகொடுத்து கேட்டார்கள். முடிந்த இடத்தில் தங்களை திருத்திக்கொண்டார்கள். அவரது விமர்சனம் சரியானது என்றுபட்ட இடத்தில் இந்து சமூகம் திருந்த வேண்டும் என்று ராஜாஜி காந்திஜி உட்பட அனைவரும் கூறினார்கள். அம்பேத்கார் கூட இந்துமதத்தையும் ராமாயணத்தையும் விமர்சித்திருக்கிறார். அவருக்கு இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் என்ற பெருமையை இந்து தலைவர்கள்தான் கொடுத்தார்கள். அவர் கொடுத்த சட்டத்தைத்தான் இன்றுவரை இந்தியா பயன்படுத்தி வருகிறது.
//எனது முதல் கேள்வி, கடவுள் யார்? அல்லது யாவர்? இந்தக் கேள்வியில் புராணங்கள் மற்றும் நடைமுறையில் இருக்கும் சில கருத்தாடல்கள் மூலமாக அறிமுகப் படுத்தப் பட்டிருக்கும் கடவுள் தொடர்பான சில விஷயங்களை சுட்டி விளக்கம் கேட்டிருந்தேன்.
//
கடவுள் யார் என்பது உங்கள் கேள்வியாக இருக்கும்பட்சத்தில் அது தனி கேள்வி. அதற்கான விடையை ஒருவராலும் அளிக்க முடியாது. விண்டவர் கண்டிலர், கண்டவர் விண்டிலர். கடவுள் தன்னிடம்வந்து பேசினார் என்று கூறுபவர்களிடம் கடவுள் பேசவில்லை. இறையை கண்டவர்கள் அதனை பேசமாட்டார்கள்.
இறை என்பது விளக்கத்துக்கு அப்பாற்பட்டது. விளக்கத்துக்கு அப்பாற்பட்டது என்பதே விளக்கமாகும்போது, விளக்கத்துக்குள்ளும் அடங்கியது.
சுகப்பிரம்ம ரிஷி பிரம்மத்தை ஒரு கடலாக கண்டார். அதன் ஒரு துளியை ருசித்தவுடன் வாழ்நாள்முழுவதும் பிதற்றித்திரிந்தார் என்பது இதிகாசம் சொல்லும். பிரம்மத்தை உணர்ந்தவர்களே பிரம்ம ரிஷிகள். பிரம்மத்தை உணரத்தான் முடியும். விளக்க முடியாது.
ரால்ப் வால்டோ எமர்ஸன் உபநிஷதங்களை படித்து முடித்ததும் அவர் சொன்னார். "கடவுள் கூட்டமாக ரட்சிப்பதில்லை". ("God does not save souls in bundles" )
இந்த கடவுள் என்ற பதத்துக்கும் கடவுள் என்ற பதத்தில் சொல்லப்படும் கர்த்தர், அல்லா போன்றவற்றுக்கும் ஏராளமான வித்தியாசம் உண்டு. உபநிஷதத்தை படித்து புரிந்துகொண்டால்தான் அது புரியும். அத்தனையையும் நான் இங்கே கூறுவது என்பது என்னால் முடியாதது. ஆகவே உபநிஷதத்தை படித்து பாருங்கள். படிப்பதினால் என்ன ஆகிவிடப் போகிறது? தைரியமாக படித்துப்பாருங்கள்
//
அதற்கு எழிலின் பதில்: "புராணங்கள் போன்றவை ஒரு கருத்தை வலியுறுத்துவதற்காக தெய்வம் என்னும் பாத்திரத்தையும் எடுத்துக்கொண்டு உதாரணம் மூலம் கருத்தை விளக்குபவை. அவை இறை அல்ல. உபநிஷதமும் திருவாசகமும் விதந்தோதும் இறைவன்,விஷ்ணுமயம் ஜகத்து என்றும், சர்வம் ஈசம் என்றும் கூறுகின்றன.ஒரு கருத்தை குருக்கள் சுட்டிக்காட்டும்போது விரலை பார்க்கக்கூடாது. ஒரு கருத்தை விளக்க கதை கூறும்போது, கதையை பிடித்து தொங்கக்கூடாது."
கருத்தை விளக்க கதை கூறும்போது கதையை பிடித்து தொங்கக் கூடாது என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், விப்ர புராணம் சொல்லும் இது மாதிரியான உதாரணங்கள் மூலம் வலியுறுத்தப்படும் கருத்து என்ன என்பதை எழில் விளக்க முடியுமா? அதுவல்லாமல் என் கேள்விக்கு இங்கே பதில் கிடைக்கவில்லையே! என் கேள்வி 'கடவுள் யார்? அல்லது யாவர்? '. இதற்கு உதாரணங்கள் இல்லாத நேரடியான பதில் என்ன?
//
புராணத்தில் வருவதை கேட்டதும், அதனை சொன்னேன். விப்ரபுராணம் என்றால் என்ன என்று எனக்குத் தெரியாது. ஆனால் அது பற்றியும் எனக்கு கவலையில்லை. ஏனெனில், விப்ரபுராணம் போன்ற ஏராளமான புராணங்கள் கடந்த 600 வருடங்களில் அன்னியர் ஆட்சியின் போது, இந்துக்களை கேவலப்படுத்தவும், அவர்களது தெய்வங்களை அவமரியாதை செய்யவும், சமஸ்கிருதம் அறிந்த முஸ்லீம்கள், கிறிஸ்துவர்கள் மற்றும் அவர்களது கைக்கூலிகளால் இயற்றப்பட்டன. வேதங்கள் வரிவடிவமாக்கப்பட்டு அதற்கு திருகுத்தனமான விளக்கங்கள் எழுதப்பட்டன. ஆட்சியும் அதிகாரமும் முஸ்லீம்கள் கிறிஸ்துவர்கள் கையில்தான் இருந்தது. அடிமைகளாக இருந்த இந்துக்களால் அவற்றினை சகித்துக்கொண்டுதான் வாழ வேண்டியிருந்தது.
ஆனால், உண்மை எப்போதும் வெல்லும். இன்று பகவத்கீதையும், உபநிஷதமும் உலகமெங்கும் தனித்தனியாக பல்வேறு மக்களுக்கு ஆன்மீக அறிவை கொடுத்து வருகின்றன. உங்கள் வெளிவேஷத்தை மாற்றவில்லை. உள்மனத்தை மாற்றுகின்றன. படிக்க தெம்பும், புரிந்துகொள்ளக்கூடிய மூளையும், அறிந்துகொள்ளக்கூடிய மனமும் இருந்தால் உங்களுக்கும் அந்த ஆன்மீக உணர்வு கிடைக்கும்.
கடவுள் என்பது பற்றி மேலே எழுதியிருக்கிறேன். அது வரையறைக்குள் சிக்காதது. யாரேனும் வரையறைக்குள் கொண்டுவந்துவிட்டேன். இந்த புத்தகத்துக்குள் இந்த பிரபஞ்சத்தை உருவாக்கி காத்து அழிக்கும் கடவுளை அடக்கிவிட்டேன் என்று சொன்னால், நகைக்கத்தான் முடியும் என்று சொல்லி விலகுங்கள்.
கடவுளின் அம்சம் இருக்குமா? நிச்சயம் இருக்கும். இந்துக்களை பொறுத்தமட்டில் இந்த பிரபஞ்சமே கடவுளுக்குள்தான் இருக்கிறது. ஒவ்வொரு துளி அணுவிலும் இறை இருக்கிறது. அதனால் உங்களுக்குள்ளும் எனக்குள்ளும் இருக்கிறது. நீங்கள் பேசும் உண்மையில் இருக்கிறது பொய்யில் இருக்கிறது. அதனை விளக்க ஒரு வார்த்தை தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்று சொல்கிறது. அதுவே இந்த பிரபஞ்சத்தை உருவாக்கி காத்து அழித்து மீண்டும் உருவாக்கி காக்கிறது.
அந்த பிரபஞ்ச ஊழிக்கூத்தில் நாம் விவாதிக்கிறோம். ஏன் விவாதிக்கிறோம். நமக்கு ஏன் நாம் இறை என்ற உணர்வு இல்லை? அதனைத்தான் மாயை என்று சங்கரர் அழைக்கிறார்.
இருட்டான ஒரு மாலை நேரத்தில் ஒரு கயிறு கிடக்கிறது. அந்த கயிற்றை நாம் பாம்பு என்று அஞ்சி விலகுகிறோம். அது சற்றுவெளிச்சம் போட்டதும். அது பாம்பல்ல . அது கயிறுதான் என்று தெரிகிறது.
அது போல, நாம் இருட்டான இந்த தினசரி வாழ்க்கைக்குள் நமக்கு ஆகவேண்டிய பிரச்னைகள், உயிராதார பிரச்னைகள் என்று தினசரி ஓடுகிறோம். அதனால் இறை உணர்வை நாம் உணர்வதில்லை.
ஏன் உணர்வதில்லை?
உங்களுக்கு நாக்கில் ருசி உணர்ச்சி இல்லை என்று வைத்துக்கொள்வோம். எதனை போட்டாலும் வெறுமே சாப்பிட்டுவிடுவீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் இருக்கிறது. அது உப்பு ருசியா அல்லது இனிப்பு ருசியா என்று உங்களால் சொல்ல முடியுமா? இனிப்பு ருசி எப்படி இருக்கும் என்று ஒருவர் உங்களுக்கு விளக்க முடியுமா?
"இனிப்பு ரொம்ப ருசியாக இருக்கும். இனிக்கும். நல்லா இருக்கும்" என்றுஆயிரம் வார்த்தைகள் சொல்லலாம். அந்த ருசியை உங்களுக்கு கொடுக்க முடியுமா?
அது போலத்தான் இறை உணர்வு. அது பேரின்பம் என்று சொல்வார்கள்.
அதனை தெரிந்துகொள்ள முடியும் என்று இந்து ஆன்மீகப்பெரியவர்கள் கூறியிருக்கிறார்கள். அதற்கு வழிமுறைகளை கூறியிருக்கிறார்கள். அதனையெல்லாம் தொகுத்து பகவத் கீதையில் அவற்றை யோகங்களாக கிருஷ்ணர் கூறுகிறார். தமிழ்நாட்டு சித்தர்களும் அதனையே கூறுகிறார்கள். நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையிலே என்று கேட்பதும் அதனால்தான். நாதன் கல்லினுள்ளும் இருக்கிறான் நம்மின் உள்ளும் இருக்கிறான் என்பதுதான் பொருள்.
எனக்கு தெரிந்துகொள்ள அவசியமில்லை. எனக்கு அந்த பேரின்பம் வேண்டாம் என்று சொல்லி மறுதலித்துவிடலாம். உங்கள் இஷ்டம். அது வேண்டும் என்று பலர் முயற்சி செய்யலாம். அது அவர்கள் இஷ்டம்.
மிக எளிமையாக சிலருக்கு பிறவியிலேயே இறை உணர்வு அபூர்வமாக இருக்கும். அவர்கள் அற்புதங்களை நிகழ்த்தக்கூடியவர்களாகவும், ஞானவான்களாகவும் இருக்கலாம். ஆனால், பலர் அப்படி அற்புதங்களை நிகழ்த்துவதில்லை. இறை உணர்வு என்ற ஒன்றை பெற்றதும். அப்படிப்பட்ட அற்புதங்கள் எனக்கு செய்யமுடியும் என்று காட்டிக்கொள்வது தேவையற்றதாக ஆகிவிடுகிறது. இறை என்று உணர்ந்ததும், தன்னை யாருக்காக விளம்பரப்படுத்திக்கொள்ள வேண்டும்? எப்போது ஒருவர் தன்னிடம் உள்ள இறை உணர்வை விளம்பரப்படுத்திக்கொள்கிறாரோ அப்போது அது போய்விடுகிறது என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்.
இறை உணர்வு என்பதற்கான வழிமுறைகள் என்பதை குரு சொல்லித்தர முடியுமே தவிர, அந்த குருவின் சீடனாக இருப்பதாலோ, அந்த குருவின் தனிப்பட்ட குணநலன்களோ உங்களை கடைத்தேற்றாது.
எத்தனை எத்தனையோ ரிஷிகள் வேதம், ராமாயணம், மகாபாரதம், உபநிஷதம், திருவாசகம், பிரபந்தம் ஆகியவற்றை நமக்காக தந்திருக்கிறார்கள். அதனை படியுங்கள். அவற்றில் பல முத்துக்கள் இருக்கின்றன. அவை மனிதர் அனைவரின் சொத்து. அவைகளை படிப்பதன் மூலம் உங்களுக்கு இறை உணர்வு வந்துவிடாது. ஆனால், அது இது இனிப்பு என்று ஒருவர் உங்களிடம் விளக்க முயற்சிப்பது போன்ற முயற்சி அது. உங்களுக்கு இறை அருளிருந்தால், நீங்களும் இறை உணர்வை அடையலாம். அதற்கு எந்த குருவும், எந்த மடாதிபதியும் அனுமதி தரவேண்டியதில்லை.
எல்லோரிலும் இறை உள்ளது என்பதனை உணர்ந்த இந்து ஞானிகள் தலித்துளின் நல்வாழ்வுக்காகவும், அவர்களின் சமத்துவத்துக்காகவும் தங்கள் வாழ்நாள் தோறும் போராடி வந்திருக்கிறார்கள். ராமானுஜரின் குரு ஒரு தலித். சங்கரரின் குருவும் தலித்தே. சங்கரரின் மனத்தில் இருந்த ஏற்றத்தாழ்வு சிந்தனையை போக்க சிவபெருமான் புலையர் வேடத்தில் வந்து அவரிடம் பேசினார் என்று சொல்வார்கள். இவையெல்லாம் தெரிந்த இந்துக்கள் இங்கே குறைவு. ஆனாலும் அவர்கள் இந்துக்கள் என்ற பெயரில் இருப்பதால், ஆன்மீகத்துக்கான வழியை திறந்து வைத்திருக்கிறார்கள். அதனால்தான், ரிஷி மூலம் பார்க்கக்கூடாது என்று சொல்கிறார்கள். ஒருவர் சாமியாராகி துறவு பூண்டுவிட்டால் அவருக்கு ஜாதி மதம் ஏதும் இல்லை என்று சொல்கிறார்கள். அதனால்தான் பிறப்பால் முஸ்லீமான ஷீரடி சாயிபாபாவும், கபீர்தாஸ் போன்றவர்களும் ரிஷிகளாக வணங்கப்படுகிறார்கள்.
800 ஆண்டுகளுக்கு முன்னால், தாழ்த்தப்பட்டவர்கள் என்று யாரும் இல்லை. அதன் பின்னர் வந்தவர்களான சுல்தான்கள் மொகலாயர்கள் போன்றவர்கள் தங்களை எதிர்த்தவர்களது சொத்துக்களையும் நிலங்களையும் பிடுங்கி அவர்களது நிலத்தை முஸ்லீம் ஜமீன்தார்களிடம் கொடுத்தார்கள். அடிமைகளாக்கப்பட்டவர்களும் தோற்றவர்களும் தாழ்த்தப்பட்டவர்களாக ஆனார்கள். இது இந்தியாவெங்கும் நடந்தது. தோற்றவர்கள் இஸ்லாமியர்களாக மதம் மாற கட்டாயப்படுத்தப்பட்டார்கள். மாற மறுத்தவர்கள் நிலங்கள் சொத்துக்கள் பிடுங்கப்பட்டு தோற்றவர்கள் என்று அறிவிக்கப்பட்டு கொத்தடிமைகளாக மாற்றப்பட்டார்கள். (பாகிஸ்தானில் ஹரி என்றால் இந்து தலித்துகளை குறிக்கும் வார்த்தை. ஹரி என்றால் தோற்றவர்கள் என்று உருதுவில் பொருள் என்று சொல்வார்கள்) இது போல அரசியல்காரணங்களுக்காக பல சமூகங்கள் தாழ்த்தப்பட்டும், தாழ்த்தப்பட்ட சமூகங்கள் பின்பு மேலெழுந்து அரசாள வந்ததும் நடந்திருக்கிறது. அரசியலை தாண்டி இந்து ஞானிகள், எல்லோருள்ளும் இருக்கும் இறைவனை கண்டவர்கள், சமத்துவத்தையும் சமநீதியையுமே போதித்திருக்கிறார்கள்.
இந்து மதத்திலிருந்து பல்வேறு மக்கள் மதம் மாறினார்கள். அவ்வாறு மாறுவதை யாரும் தடுக்கவில்லை. ஏன் என்றால், அப்படி தடுக்கக்கூடிய சக்தி எந்த இந்துவுக்கும் இல்லை. அப்படி தடுத்தவர்கள் கூட கலாச்சார காரணங்களுக்காகத்தான் தடுக்க முனைந்தார்கள். முஸ்லீம் அல்லது கிறிஸ்துவன் ஆனதும் நடை உடை பாவனை அனைத்தும் மாற்றப்பட்டு தன்னுடைய முன்னாள் சமூகத்துக்கே எதிராக அவன் திருப்பப்படுகிறான். இதனைத்தான் எதிர்த்தார்கள். ஆனால், இந்துக்கள் சர்ச்சுக்கு போவதையோ மசூதிக்கு போவதையோ இப்போதும் யாரும் தடுப்பதில்லை.
இந்து மதத்தின் படி, நீங்கள் எந்த வழியில் இறை உணர்வை தேடுகிறீர்கள் என்பது உங்களைப் பொறுத்த விஷயம்.
இப்படிப்பட்ட ஞானம் இந்தியாவில்தான் வருமா? என்பது உங்கள் கேள்வியாக இருக்கலாம்.
இல்லை. பிறவியிலேயே இறைஉணர்வு பெற்றவர்கள் எந்த தேசத்திலும் பிறக்கலாம்.
மன்சூர் அல் ஹல்லாஜ் பெர்ஷியாவில் பிறந்த ரிஷி. அவர்தாம் சூபியிஸத்தின் ஸ்தாபகர்.
http://en.wikipedia.org/wiki/Mansur_Al-Hallaj
தன்னுடைய சட்டையை காண்பித்து "இந்த சட்டைக்குள் இறைவனைத்தவிர வேறு யாரும் இல்லை" என்று சொன்னார்.
அவர் சித்திரவதை செய்து கொல்லப்படும்போது அமைதியாக சிரித்துக்கொண்டிருந்தார் என்று சொல்வார்கள்.
இதே போல, ஒரு காலத்தில் தமிழ்நாட்டில், அரசாங்கத்தில் பலம் பெற்றிருந்த சமணர்கள் அப்பர் என்னும் திருநாவுக்கரசரை சுண்ணாம்பு களவாயில் போட்டு சுட்டபோது சிரித்துக்கொண்டே "மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் மூசு வண்டறை பொய்கையும் போன்றதே ஈசன் எந்தை இணையடி நீழலே" என்று பாடினார்.
அதுவே இறைஉணர்வு. அந்த இறைஉணர்வு பொதுவானது.
தான் என்னும் உணர்வு அழிந்து இறையுணர்வோடு கலக்கும் நிலையை பேரின்பம் என்று இந்து ஞானிகள் கூறினார்கள். அதையே சூபிகள் ·பானா ·பிலா என்று கூறுவார்கள். தான் என்னும் உணர்வு அழிந்து இறையுணர்வோடு கலந்த நிலையை குறிப்பார்கள்.
ஆக இந்த இறையுணர்வு கூட்டம் கூட்டமாக வராது. ஒவ்வொரு தனி மனிதரும் முயற்சி செய்து அடைய வேண்டிய நிலை. விரும்பினால்.
நீங்கள் சொல்லலாம். நான் முஸ்லீம் என்ற பெயரில் இருந்தாலும் நான் இந்த இறையுணர்வை அடையமுடியுமென்றால் ஏன் நான் இந்துவாக வேண்டும் என்று கூறுகிறீர்கள் என்று என்னை கேட்கலாம்.
மிகச்சரியான கேள்வி.
உங்களை யாரும் தடுக்கப்போவதில்லை. அந்த இறையுணர்வை நீங்கள் இன்று இந்தியாவில் இந்துக்கள் நிறைந்த இந்தியாவில் அடையலாம்.
முஸ்லீம்கள் நிறைந்த பெர்ஷியாவில் மன்சூர் ஹல்லாஜ் அவர்களுக்கு என்ன ஆயிற்று? சமணர்கள் நிறைந்த தமிழ்நாட்டில் இருந்த திருநாவுக்கரசருக்கு என்ன ஆயிற்று? இப்படிப்பட்ட இறையுணர்வு பெற்ற மனிதர்கள் போற்றத்தகுந்தவர்கள். சித்திரவதை செய்யப்பட வேண்டிய மனிதர்கள் அல்ல.
அப்படிப்பட்ட மனிதர்களை போற்ற வேண்டுமென்றால், அல்லது நீங்களே அப்படிபட்ட முயற்சியில் ஈடு பட வேண்டுமென்றால், அப்படிப்பட்ட இறையுணர்வு என்பதை புரிந்துகொண்ட சமூகம் வேண்டும்.
அதுவே அமிர்ந்தானந்த மயி அம்மா மீனவக்குடும்பத்திலிருந்து வந்தாலும் போற்றுகிறது. அதுவே ஷீரடி சாயிபாபா முஸ்லீம் குடும்பத்திலிருந்து வந்தாலும் அவரை போற்றுகிறது.
இப்படிப்பட்ட ஞானிகளுக்கு சமூகத்தில் இடம் இருக்க வேண்டும். அவர்களை பின்பற்ற வேண்டுமென்ற கட்டாயம் உங்களுக்கில்லை. ஆனால், அவர்கள் சமூகத்தில் தோன்றவும் தங்களது ஆன்மீக உணர்வுகளை கூறவும் இடம் வேண்டும்.
ஆகவே இந்தியாவில் இருக்கும் இந்து மதம் உலகெங்கும் பரவி அங்கும் ஆன்மீக சுதந்திரத்துக்கு வழி செய்துகொடுக்க வேண்டும்.







