Friday, February 22, 2008

வடமாநிலங்களில் காங்கிரஸ் தோல்விக்கு திமுகவே காரணம்

திமுக தலைவர் ராமரை கேவலப்படுத்தி பேசியதால், அதன் கூட்டணி காங்கிரஸ் கட்சி வட மாநிலங்களில் தோற்றத் என்று விஜயகாந்த் கூறுகிறார்.

(அப்படித்தான் காங்கிரஸ் தலைவர்கள் நினைக்கிறார்கள் போலிருக்கிறது. இதனால்தான் அருண்குமார் விஜயகாந்துடன் கூட்டணி வைக்க விரும்புகிறார் போலிருக்கிறது)

--
நன்றி தட்ஸ்டமில்

காங்கிரஸ்-இடதுசாரிகளுடன் கூட்டணிக்கு தயார்: விஜய்காந்த்
வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 22, 2008


சென்னை: காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகளுடன் கூட்டணிக்குத் தயார் என தேமுதிக தலைவர் விஜய்காந்த் கூறியுள்ளார்.

அவர் அளித்துள்ள பேட்டி:

நாங்கள் ஊழலுக்கு மட்டுமல்ல ஜாதி, மதங்களை ஆதரிப்போருக்கும் எதிரானவர்கள். இவற்றை எதிர்க்கும் எந்த கட்சியுடனும் கூட்டணி சேர நாங்கள் தயார்.

காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள் இந்த கொள்கைகளை கடைப்பிடிக்கின்றன. ஜாதி கட்சிகளான பாமக, விடுதலை சிறுத்தைகள் ஆகியோருடன் நாங்கள் அமைக்கவே மாட்டோம்.

தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளரான அருண்குமார் மூத்த அரசியல்வாதி, நாங்கள் இருவரும் சந்தித்தது பற்றி வெளியே சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

எங்கள் கட்சி மிக வேகமாக வளர்வதால் காங்கிரஸ் தலைவர்கள் எங்களை நெருங்கி வருகிறார்கள். எங்கள் கட்சி அடுத்த சட்டசபை தேர்தலில் ஆட்சியை பிடிக்கும். இதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.

திமுக, அதிமுக கட்சிகளுக்கு மாற்று சக்தியாக எங்கள் கட்சி உருவாகி வருகிறது. மக்கள் தேமுதிக மீது நல்லெண்ணம் வைத்துள்ளனர்.

2006ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பெரிய கட்சிகளான திமுக, அதிமுகவுக்கு எதிராக எங்கள் கட்சி 8.38 சதவீத ஓட்டு பெற்றது. உள்ளாட்சி தேர்தலில் எங்கள் கட்சியின் பலம் அதிகரித்தது.

எங்கள் கட்சியை 3வது அணி என்று சொல்வதை ஏற்க முடியாது. நாங்கள் தான் பிரதான அணி. எங்கள் தலைமையில் மற்ற கட்சிகள் வந்தால் வரவேற்போம்.

ஊழலுக்கும், சாதி மத, அரசியலுக்கும் எதிராக பாடுபடுவோம் என்று நான் மக்களுக்கு உறுதி அளித்திருக்கிறேன். அதில் கடைசி வரை நான் மிக உறுதியாக இருப்பேன்.

திமுக, அதிமுக இரண்டுமே மக்கள் ஆதரவை இழந்துவிட்டன. அவர்கள் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை.

திமுக ஆட்சியின் நிர்வாகம் மிக மோசமாக உள்ளது. சிமெண்ட் விலை, கேபிள் டி.வி. பிரச்சனையில் அரசு பெரும் குழப்பத்தில் உள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி 40 தொகுதிகளையும் வென்றது. ஆனால் சேது சமுத்திர பிரச்சினையில் ராமர் பற்றி கருணாநிதி பேசியது காங்கிரசுக்கு எதிராக அமைந்துவிட்டது.

இதனால் தான் வட மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் தோற்றது. மத நம்பிக்கைக்கு எதிராக பேசியதால் இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது.

கருணாநிதியும், ஜெயலலிதாவும் கட்சி தொண்டர்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறாகள். எனவே அந்த கட்சிகளில் உள்ள இளைஞர்களும், பெண்களும் அங்கிருந்து வெளியேறி எங்கள் கட்சியில் இணைந்து வருகின்றனர் என்று கூறியுள்ளார் விஜய்காந்த்.

No comments: